காங்கிரஸுடன் கட்சியை இணைக்கும் திட்டமில்லை: டிஆர்எஸ் தலைவர் ராவ் திட்டவட்டம்
ஹைதராபாத்: காங்கிரஸூடன் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை இணைக்கும் திட்டமில்லை என அக்கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர ராவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி சந்திரசேகர ராவ் உள்ளிட்ட பல்வேறு தெலுங்கானத் தலைவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகாலப் போராட்டத்தின் பயனாக மத்திய அரசு சமீபத்தில் ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அமைவளிலும் நிறைவேற்றியது.
தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப் பெற்றால் தனது கட்சியை இணைத்துக் கொள்வேன் என சந்திரசேகர ராவ் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்திரசேகர ராவ் டெல்லியில் சந்தித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைத்ததற்காக தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பு கட்சிகள் இணைவதை உறுதி செய்வது போல் அமைந்தது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் நேற்று தெலுங்கானா ராஷ்டிரிய கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரசேகர ராவ், ‘காங்கிரஸ் கட்சியுடன் எங்கள் கட்சியை இணைக்க நாங்கள் தயாராக இல்லை. வேண்டுமானால் அவர்களுடன் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்கலாம் என கட்சியினர் கருதுகின்றனர். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கென ஒரு தனி அடையாளம் உள்ளது. அதனை இழக்க நாங்கள் தயாராக இல்லை' என இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், டி.ஆர்.எஸ். அதிருப்தி எம்.பி. விஜயசாந்தி மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். இதற்கு அக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப் பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
காங்கிரசுடன் இணைவதில் இந்த விவகாரமே முட்டுக் கட்டையாக அமைந்ததாக தெரிகிறது.