காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை.. கர்நாடக கேஆர்எஸ் அணையிலிருந்து மேட்டூருக்கு நீர் திறப்பு
மைசூர்: கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து மேட்டூருக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதையடுத்து மண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து, அந்த அணையில் இருந்து விநாடிக்கு 2500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நடப்பு சீனில், இதுவரை தண்ணீரை திறக்காமல், வறட்சி நிலவுவதை காரணம் காண்பித்து, தாமதித்து வந்த கர்நாடகா, இப்போதுதான் முதல் முறையாக நீரை திறந்துள்ளது.
இந்த தண்ணீர் 48 மணி நேரத்தில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீர் வரும் வழி வறண்டு கிடப்பதால், தண்ணீர் வந்துசேர கூடுதலாக ஒருநாள் கூட ஆகலாம் என்று கணிக்கிறார்கள் அணை பொறியாளர்கள்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் எதிர்பாராமல் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளதால், நேற்று முன்தினம் ஓடை போல காட்சியளித்த காவிரியாற்றில், நேற்று காலை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, கரையோர மக்கள் மத்தியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. மேட்டூர் அணை பண்ணவாடி துறையில் இருந்து, மறுகரையிலுள்ள நாகமறைக்கு மக்கள், பரிசல் மூலம் காவிரியாற்றை கடந்து செல்கின்றனர்.
நேற்று காலை 124 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 622 கனஅடியாக அதிகரித்தது. தற்போது மேட்டுர் அணையின் நீர் மட்டம் 42.12அடியாக உள்ளது. அணையில் இருந்து 1200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நேற்று காலை 124 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 622 கனஅடியாக அதிகரித்தது. தற்போது மேட்டுர் அணையின் நீர் மட்டம் 42.12அடியாக உள்ளது. அணையில் இருந்து 1200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி ஜூன் மாதத்தில் கர்நாடகா 10 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும். அப்படியே திறந்துவிட்டாலும், மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி, தண்ணீரை குறுவைசாகுபடிக்கு திறக்க முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா சில வாரங்கள் முன்பு தெரிவித்திருந்தார்.
ஆனால் நல்ல மழை பெய்து கர்நாடகத்தில் இருந்து உபரி நீரும் மேட்டூர் அணைக்கு பெருமளவில் வந்தால் டெல்டா பாசன விவசாயிகளுக்கு பலன் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் விவசாயிகள்.