மெக்சிகோவில் அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட டெக்கீலா மீன் இனம் - மீண்டும் தழைத்த கதை
"அது ஒரு சிறிய மீன், மிகவும் வண்ணமயமானதல்ல - உலக அளவில் அந்த மீனைப் பாதுகாக்க வேண்டும் என்று அதிக ஆர்வம் கூட இல்லை" என விளக்குகிறார் ஜெரார்டோ கார்சியா.
செஸ்டர் விலங்கு கண்காட்சி சாலையின் பல்லுயிர் பாதுகாவலர் குறிப்பிட்டுப் பேசும் உயிரினம் டெக்கீலா மீன் (Tequila fish). அந்த இன மீன்கள் அழிந்துவிட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் வனத்துக்குத் திரும்பியுள்ளது.
2003ஆம் ஆண்டு முதல் ''காணாமல் போன'' டெக்கீலா மீன்கள், தென்மேற்கு மெக்சிகோவின் ஆறுகளுக்குத் திரும்பியுள்ளன.
நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் உயிரினங்களையும் எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அவை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
நன்னீரில் வாழும் உயிரினங்கள்தான் பூமியில் அதிக அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன, நன்னீர் உயிரிகள், நிலம் அல்லது கடலில் வாழும் உயிரினங்களை விட வேகமாக அழிந்து வருகின்றன என்கிறது இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்.
- 2000 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த செக்வோயா மரங்களை அழித்த கலிஃபோர்னியா காட்டுத்தீ
- காணாமல்போகும் காட்டுயிர்: இந்தியாவில் 10 ஆண்டுகளில் 984 புலிகள் பலி - காரணம் என்ன?
மாசுபாடு உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் வன உயிரினங்களுக்கு மட்டுமின்றி, ஆறுகள் மற்றும் ஏரிகளைச் சார்ந்திருக்கும் உயிரினங்கள், சுத்தமான நீர் மற்றும் உணவுக்காக ஆறு மற்றும் ஏரிகளைச் சார்ந்திருக்கும் உயிரினங்கள் மீதும் அழுத்தம் கொடுக்கின்றன.
மெக்சிகோவின் ஜாலிஸ்கோவில், டெக்கீலா மீன்கள் வெளியிடப்பட்டுள்ள நீர்நிலைக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் சமூக மக்கள், ஆறுகள் மற்றும் ஏரிகளின் நீரின் தரத்தை கண்காணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மெக்சிகோவின் மிச்சோகானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒமர் டொமிங்குவேஸின் அணி, டெக்கீலா மீன்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது. "உள்ளூர் மக்கள் இல்லாமல் நாங்கள் இதைச் செய்திருக்க முடியாது, அவர்கள் நீண்ட காலமாக இதை பாதுகாத்து வருகிறார்கள்".
"மெக்சிகோவில் அழிந்துபோன மீன் இனம் வெற்றிகரமாக மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை, எனவே இது பாதுகாப்பிற்கான உண்மையான அடையாளம்.
"இது ஒரு திட்டமாகும், இது நாட்டில் உள்ள பல மீன் இனங்களின் எதிர்கால பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய முன்மாதிரியாக அமைத்துள்ளது, அவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன அல்லது காடுகளில் அழிந்துவிடுகின்றன. ஆனால் அது அரிதாகவே நம் கவனத்துக்கு வருகிறது."
பாதுகாவலர்கள் ஆரம்பத்தில் 1,500 மீன்களை விடுவித்தனர், இப்போது அதன் எண்ணிக்கை நதியில் அதிகரித்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
இது மெக்சிகோ மற்றும் பிரிட்டனில் உள்ள பல்லுயிர் பாதுகாவலர்களுக்கு இடையே பல தசாப்தங்கள் பின்னோக்கிச் செல்லும் ஒரு திட்டம் மற்றும் ஒரு கூட்டாண்மை ஆகும்.
1998ஆம் ஆண்டில், திட்டத்தின் தொடக்கத்தில், மெக்சிகோவின் மிச்சோகானா பல்கலைக்கழகத்தின் நீர்வாழ் உயிரியல் பிரிவின் விஞ்ஞானிகள் செஸ்டர் விலங்கு கண்காட்சி சாலையில் இருந்து ஐந்து ஜோடி மீன்களைப் பெற்றனர். இந்த 10 மீன்களும் பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில் ஒரு புதிய காலனியை நிறுவின, பின்னர் அங்குள்ள வல்லுநர்கள் அதை அடுத்த 15 ஆண்டுகளில் பராமரித்து இனப்பெருக்கம் செய்ய வைத்தனர்.
மறு அறிமுகத்திற்கான தயாரிப்பில், காலனியைச் சேர்ந்த 40 ஆண் மீன்களும் 40 பெண் மீன்களும் பல்கலைக்கழகத்தில் உள்ள பெரிய, செயற்கைக் குளங்களில் விடுவிக்கப்பட்டன.
முக்கியமாக சிறைபிடிக்கப்பட்ட மீன்களுக்கு உணவு கிடைப்பதில் ஏற்படும் மாற்றங்கள், சாத்தியமான போட்டியாளர்கள், வேட்டையாடும் உயிரினங்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வது ஆகியவற்றில் வன அமைப்பில் பயிற்சி அளித்தனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மீன்களின் எண்ணிக்கை 10,000-மாக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- மொரிஷியஸ் தீவு ஏன் தன் கிளிஞ்சல்களை இழந்துகொண்டிருக்கிறது?
- ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காணப்பட்ட அரிய 'நடக்கும் மீன்'
மெக்சிகோவின் வடக்கே உள்ள ஒரே ஒரு ஏரியில் வாழும் ஆக்சோலோடலுடன் (axolotl) நெருங்கிய தொடர்புடைய அச்சோக் (achoque) உட்பட மற்ற நன்னீர் இனங்களுக்கு இது ஒரு மாதிரியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த உயிரினமும் டெக்கீலா மீன் எதிர்கொண்டதைப் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது.
இந்த தனித்துவமான உயிரினம், உள்ளூர் கலாசாரத்தில் நோய்களைக் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. விலங்குகளைப் சிறை பிடித்து இனப்பெருக்கம் செய்யும் மையத்தை நடத்தும் உள்ளூர் கன்னியாஸ்திரிகளின் முயற்சியால் ஒரு பகுதி உயிரினம் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது.
சரியான நேரத்தில், சரியான சூழ்நிலைகளில் உயிரினங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் போது அவை மீண்டும் காட்டுக்குத் தகுந்தாற் போல தன்னை மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்பதை இது காண்பிக்கிறது என்கிறார் ஜெரார்டோ கார்சியா.
பிற செய்திகள்:
- இலங்கையில் உணவு பற்றாக்குறை: குறையும் நெல் உற்பத்தி - அச்சுறுத்தும் விலையேற்றம்
- ரோமானிய காலத்தில் வாழ்ந்த இந்த பெண்களைப் பற்றி உங்களுக்கு தெரியாத 7 விஷயங்கள்
- அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல இடங்களின் பெயர்களை சீனா மாற்றுவது ஏன்?
- எழில் கொஞ்சும் வேளாண் கிராமத்தில் புயலாக வீசும் சிப்காட் தொழிற்பேட்டை யோசனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்