போராட்ட நிதியை 'ஆட்டைய' போட்டு உல்லாசமாக வாழ்வதாக ஹர்திக் படேல் மீது 'சகா'க்கள் பரபர குற்றச்சாட்டு
அகமதாபாத்: படேல் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரி நடத்தப்படும் போராட்டங்களுக்கான நிதியை முறைகேடாக பயன்படுத்தி உல்லாசமாக வாழ்ந்து வருவதாக ஹர்திக் படேல் மீது அவரது போராட்ட குழு சகாக்களே புகார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் முற்படுத்தப்பட்ட சமூகமான படேல்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு தர வேண்டும்; அல்லது இடஒதுக்கீட்டு முறையையே ஒழிக்க வேண்டும் என்பது ஹர்திக் படேல் முன் வைத்த கோரிக்கை. இந்த கோரிக்கையின் அடிப்படையில் படேல் சமூகம் ஒன்று திரண்டு போராட்டத்தில் குதித்தது.
இப்போராட்டங்களால் குஜராத் வன்முறைக் காடானது. இதனால் ஹர்திக் படேல் உள்ளிட்டோர் மீது தேசதுரோக வழக்குகள் பாய்ந்தன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஹர்திக் படேல் உள்ளிட்டோர் சூரத் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அண்மையில் ஹர்திக் படேலை ஜாமீனில் விடுதலை செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம், 6 மாத காலம் குஜராத்துக்குள் நுழையக் கூடாது என நிபந்தனை விதித்தது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் ஹர்திக் படேல் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் ஹர்திக் படேலின் நெருங்கிய சகாக்களான தேசதுரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சிராக் படேல், கேதன் படேல் ஆகியோர் பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், படேல் சமூகம் இடஒதுக்கீட்டு கோரிக்கையை முன்வைத்தது. அதை பயன்படுத்தி நீங்கள் உங்களது செல்வாக்கை வளர்த்துக் கொண்டீர்கள்.
9 மாதம் சிறைவாசத்தை நீங்கள் மட்டுமே அனுபவித்ததாக காட்டிக் கொள்கிறீர்கள்...நாங்கள் எல்லோரும்தானே சிறைவாசம் அனுபவித்தோம்..
இந்த இடஒதுக்கீட்டுக்கான நிதியை உங்களது உறவினர்கள் முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர். நீங்களும் உங்களது உறவினர்களும் சொகுசு கார்களில் உல்லாச பவனி வருகிறீர்கள்.
இந்தப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்கள் குடும்பத்துக்கு என்ன உதவியை செய்திருக்கிறீர்கள்? நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் அத்தனை ரகசியங்களும் அம்பலமாகிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.