வாரணாசி தொகுதிக்கு முதல் முறையாக பயணம்... ஜெயபூர் கிராமத்தை தத்தெடுத்தார் மோடி
வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் உள்ள ஜெயபூர் என்ற கிராமத்தை தத்தெடுத்த பிரதமர் நரேந்திர மோடி அதை அனைத்து வசதிகளும் கொண்ட கிராமமாக மாற்றப்போவதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் ஆன பின்னர் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது தொகுதியான வாரணாசி சென்றார். அவரை அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் வரவேற்றார். பின்னர் வாரணாசியில் பிரதமர் நரேந்திரமோடி, தேர்தல் பிரசாரத்தின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி நெசவாளர்களுக்கான திட்டங்களை அறிவித்தார். நெசவாளர்கள் தயாரிக்கும் பொருட்கள் உலகம் முழுவதும் உள்ள நுகர்வோரை சென்றடைய வேண்டுமானால், இ- காமர்ஸ் சந்தையை பயன்படுத்த வேண்டும் என்று மோடி அப்போது கேட்டுக் கொண்டார்.
கிழக்கு உத்தரபிரதேசத்தில் வங்கிகளை புதுப்பிக்க ரூ 2.375 கோடி நிதி உதவியையும் மோடி அறிவித்தார். பணம் மட்டும் நெசாவளர்களுக்கு உதவியாகாது, தொலை நோக்கு பார்வையும் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
பின்னர் எம்.பி.க்களுக்கான மாதிரி கிராமம் தத்தெடுப்பு திட்டத்தின்கீழ் வாரணாசி தொகுதியில் ஜெயபூர் என்ற கிராமத்தை தத்தெடுக்கும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். அப்போது கிராமத்தை பிரதமர் மோடி தத்தெடுத்துக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஜெயபூரை நான் தத்தெடுத்துக் கொண்டுள்ளேன் என்பது சரியானது அல்ல, ஜெயபூர் கிராமம் என்னை ஏற்றுக் கொண்டுள்ளது. என்று குறிப்பிட்டார்.