இந்திய மக்களே தன்னை வழிபட வேண்டும்.. மோடியின் விருப்பமே இதுதான்.. ராகுல் காந்தி கடும் தாக்கு
குருஷேத்ரா: இந்தியாவே தன்னை வழிபட வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பமாக இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி மட்டுமல்ல.. பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் காரர்களும் கூட தாங்கள் வழிபட வேண்டும் என்றே விரும்புகிறார்கள் என்றும் ராகுல் காந்தி கூறினார்.
பாரத் நாட்டு மக்கள் மத்தியில் வெறுப்பை தூவிவிட்டு, அதன் மூலம் குளிர்காய விரும்புவர்கள்தான் தன்னை கடவுள் போல காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர் என்றும் அவர் விமர்சித்தார்.
இதுவே இந்தியா.. பாஜகவின் இந்தி பெயர்களை எதிர்க்கிறோம்! தமிழை விட மாட்டோம் -நெத்தியடி கொடுத்த முரசொலி
வெறுப்பை விதைக்கும் பாஜக
ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாரத் ஜோடோ யாத்திரை ஹரியாணாவின் குருஷேத்ரா நகரை இன்று காலை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்தார். அவர் பேசியதாவது: ஒட்டுமொத்த இந்தியாவே இன்று மோசமான சூழலை சந்தித்து வருகிறது. நாட்டை ஆளும் ஒரு பாஜக, மக்களின் வளர்ச்சியை பற்றி சிந்திக்காமல் அவர்களை எப்படி பிரிப்பது என்று மட்டுமே சதாசர்வக்காலமும் சிந்தித்து வருகிறது. மக்கள் இடையே கொஞ்சம் ஒற்றுமை ஏற்பட்டால் கூட அவர்களால் பொறுக்க முடியாது. அதனால் வெறுப்பையும், விரோதத்தையும் ஆட்சியாளர்கள் விதைத்து வருகின்றனர்.
இந்துக்களுக்கு எதிரி யார்?
மக்களை ஒன்றாக சேரவிடாமல் பிரித்தால் மட்டுமே பாஜகவால் அரசியல் செய்ய முடியும். எனவே அந்த வேலையை அவர்கள் சரியாக செய்து வருகிறார்கள். மத ரீதியாக இந்து - முஸ்லிம்களையும், இன ரீதியாக சில ஜாதியினரையும் எதிரிகளை போல அவர்கள் மாற்றிவிட்டார்கள். மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயத்தை அவர்கள் அடைந்து வருகிறார்கள். இனியாவது பாஜகவின் இந்த வெறுப்பு அரசியலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்துக்களுக்கு எதிரி முஸ்லிமோ, முஸ்லிம்களுக்கு எதிரி இந்துவோ அல்ல. நம் அனைவருக்கும் பொதுவான எதிரி பாஜகதான் என்ற உண்மையை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
மோடியை வழிபட வேண்டுமா?
இவ்வாறு நாட்டு மக்கள் மத்தியில் வெறுப்பு விதைகளை தூவி அதன் மூலம் குளிர்காயும் கட்சியான பாஜகவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இன்னும் ஒரு விருப்பம் இருக்கிறது. அதாவது, ஒட்டுமொத்த நாட்டு மக்களும் தங்களை வழிபட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கும் அந்த எண்ணம் இருக்கிறது. தங்கள் அதிகார பலம் மூலமாகவும், அச்சத்தை விதைப்பதன் வாயிலாகவும் மக்களை எப்படியாவது தங்களை வழிபட வைத்துவிட வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இந்திய மக்கள் ஒருகாலும் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற மாட்டார்கள்.
"பாஜகவுடன் நடைபெறுவது சித்தாந்த சண்டை"
நாட்டு மக்கள் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே நடைபெறுவது அரசியல் சண்டை அல்ல. யார் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற போகிறார்கள் என்ற சண்டை அல்ல. மாறாக, இது சித்தாந்த ரீதியிலான சண்டை. தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையேயான சண்டை. இதில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.