செல்லாத நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்த அண்ணன், தங்கச்சிக்கு உதவிக் கரம் நீட்டிய மோடி
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வந்த ஆதரவற்ற பிள்ளைகளுக்கு நிதியுதவி அளித்துள்ளார் பிரதமர் மோடி.
கோடா: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆதரவற்றோர் தங்கும் விடுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் ரூ.96,500 பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் அவதிப்பட்ட நிலையில் அவர்களுக்கு மோடி உதவியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. பொதுமக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை மாற்றி கொள்ள ரிசர்வ் வங்கி கால அவகாசமும் கொடுத்தது.
இந்நிலையில், கோடா மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற மையத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட ஒரு சகோதரனும், சகோதரியும் வசித்து வந்தனர். அவர்களில் சூரஜ் பஞ்ஜாராவுக்கு 17 வயதாகிறது. அவரது தங்கை சலோனிக்கு 9 வயதாகிறது.
செல்லாத ரூ. 96,500
தங்கள் பெற்றோரிடம் ரூ.96,500 மதிப்புள்ள பழைய நோட்டுகள் உள்ளதாகவும் அவற்றை மாற்றித் தர உதவுமாறும் ரிசர்வ் வங்கியில் கேட்டனர். அதற்கு காலகெடு முடிந்ததால் அந்த நோட்டுகளை மாற்ற இயலாது என்று கூறிவிட்டனர்.
மோடிக்கு கடிதம்
இதனால் இருவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் நிலை குறித்து கடந்த மார்ச் 25-ஆம் தேதி கடிதம் எழுதினர். மேலும் தங்கள் பெற்றோர் வைத்திருந்த ரூ.96,500 தொகை தற்போது வெறும் காகிதங்களாக மாறிவிட்டதாகவும் எழுதினர். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்படியாக மோடியும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். மேலும் அவர்களுக்கு நிதியுதவியாக பிரதமர் நிதியிலிருந்து ரூ.50,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இலவச இன்சூரன்ஸ்
அதேபோல் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா ஆகிய திட்டங்களின் கீழ் அவர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்துக் கொடுத்து, அவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு, பிரீமியம் தொகையையும் ஒதுக்கீடு செய்துள்ளார்.
வேதனைப்படுகிறேன்
பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில், நான் ஒதுக்கியுள்ள நிதியுதவியும் காப்பீட்டு தொகையும் போதுமானதாக இருக்காது என்பதை நான் அறிவேன். உங்களின் நிலை எனக்கு வேதனை அளிக்கிறது. இருப்பின் இழப்பின் பாதிப்பை ஓரளவுக்குக் குறைக்க இது உதவும் என்று மோடி கூறியுள்ளார். நிதியுதவிக்கான தொகை கோட்டாவில் குழந்தைகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்படும்.