மகாத்மா காந்தியின் 67வது நினைவு தினம்- பிரணாப் முகர்ஜி, மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி
டெல்லி: மகாத்மா காந்தி 67-வது நினைவு நாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவை மீட்டு சுதந்திரம் பெற்றுத்தந்த மகாத்மா காந்தியின் 67வது நினைவுதினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை 11 மணி அளவில் தியாகிகளை நினைவுகூறும் விதமாக அரசு அலுவலகங்களில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
காந்தியின் நினைவை போற்றும் வகையில் தனது ட்விட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த பிரதமர் மோடி, அன்புள்ள தேசத் தந்தைக்கு அவரது நினைவு நாளில் வீர வணக்கங்கள்!. இந்த நாட்டுக்காக தங்களது உயிரை துறந்த தியாகிகளின் வீரத்தை இந்நாளில் நினைவுகூர்வோம். அவர்களின் தியாகம் நமது நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில்...
சென்னை கடற்கரை சாலையில உள்ள காந்தியடிகளின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு தமிழக ஆளுநர் ரோசய்யா மற்றும் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், பள்ளி மாணவ மாணவிகளும், பொது மக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.