பாஜகவில் சேர நிபந்தனை விதிக்கிறார் எதியூரப்பா! காங்.ல் சேர 3 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி!
டெல்லி: பாரதிய ஜனதாவில் சேருவதற்கு கர்நாடக ஜனதா கட்சியின் தலைவர் எதியூரப்பா சில நிபந்தனைகளை விதிக்கக் கூடும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் அவரது கட்சியின் 3 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸில் ஐக்கியமாகப் போவதாகவும் கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சியை உருவாக்கினார் எதியூரப்பா. முடிவடைந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அந்தக் கட்சி 6 எம்.எல்.ஏக்களைப் பெற்றது. ஆனால் ஆட்சியை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு படுதோல்வியை சந்தித்தது பாரதிய ஜனதா.
இந்த நிலையில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதனை வரவேற்ற எதியூரப்பா, பாரதிய ஜனதாவில் இணைவது பற்றி விரைவில் முடிவெடுப்போம் என்றார்.
இதைத் தொடர்ந்து இன்று பாரதிய ஜனதாவில் கர்நாடக ஜனதா கட்சியை இணைப்பது தொடர்பான ஆலோசனை தொடங்கியுள்ளது. நாளை வரை நடைபெற உள்ள ஆலோசனையின் முடிவில் அனேகமாக முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது, நரேந்திர மோடிக்கு ஆதரவு என்ற இரு அறிவிப்புகளும் வெளியிடப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் கர்நாடகா ஜனதா கட்சியை பாஜகவில் சேர்க்க சில நிபந்தனைகளை விதிக்கவும் எதியூரப்பா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிபந்தனைகளுக்கு பாஜகவின் பதில் என்ன என்பதைப் பொறுத்தே இணைவது பற்றிய முடிவு இருக்குமாம்.
ஆனால் எதியூரப்பா மீண்டும் பாஜகவில் இணைய முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா கடும் எதிர்ப்பு காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே எதியூரப்பாவின் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸில் சேர திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.