பதன்கோட் வந்தடைந்தார் பிரதமர் மோடி - தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்ற விமான தளத்தில் ஆய்வு
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட பதான்கோட் விமானப் படைத் தளத்தை நேரில் ஆய்வு செய்ய வருகை புரிந்துள்ளார். இந்நிலையில் பதன்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதமரின் வருகையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமானப் படைத் தளத்துக்கு வந்த பிரதமர் மோடி, விமானப் படை மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். பதான்கோட் விமானப் படை தளத்தில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்ற தேடுதல் வேட்டை நேற்று நிறைவு பெற்றது. விமானப் படைத் தளம் முழுக்க சோதனையிடப்பட்டு, எங்கும் எந்த தீவிரவாதியும் பதுங்கி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
PM was given a presentation on counter-terrorist & combing op by Defence Forces at #Pathankot Airbase (Source: PIB) pic.twitter.com/cYD56SUHNm
— ANI (@ANI_news) January 9, 2016
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்தில் கடந்த 2 ஆம் தேதி நுழைந்த தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இந்திய தரப்பில் 7 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். நாட்டின் பாதுகாப்பு குறித்து பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பதான்கோட் விமானப் படை தளத்தை பார்வையிடும் பிரதமர் மோடி, வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும், காயமடைந்த வீரர்களை சந்தித்துப் பேசவும், தீவிரவாதிகளுடன் நேருக்கு நேர் மோதிய வீரர்களை சந்தித்து பாராட்டு தெரிவிக்கவும் உள்ளார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பதன்கோட் விமான படை தளத்தை சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.