ஜனதா, இந்திரா, ராஜிவ் அலைகளை தூக்கி சாப்பிட்ட மோடி சுனாமி
டெல்லி: நாடு இதுவரை சந்தித்த லோக்சபா தேர்தல்களில் அவசர நிலைக்கு எதிரான கோபத்தில் ஜனதா அலையை பார்த்திருக்கிறது.. இந்திரா மற்றும் ராஜிவ் மரணங்களால் ஏற்பட்ட சோகத்தில் அனுதாப அலையை எதிர்கொண்டிருக்கிறது.. முதல் முறையாக வளர்ச்சி முழக்கத்தை முன்வைத்த மோடி சுனாமி எனும் புதிய அலை வென்று காட்டியுள்ளது.
1951 ஆம் ஆண்டு முதல் 2014 வரை 16 லோக்சபா தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. முதல் 5 லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே அசைக்க முடியாத சக்தியாக பெரும்பான்மை இடங்களைப் பெற்றது.
6வது லோக்சபா தேர்தலை நடத்த வேண்டிய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்து அடக்குமுறை கட்டவிழ்த்துவிட்டார்.

ஜனதா அலை
அதனால் மக்கள் கோபத்தில் பொங்கிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் வாஜ்பாய், அத்வானி ஆகியோரை தலைவராக கொண்ட ஜனசங்கமானது இதர சோசலிஸ்ட் கட்சிகளை ஒருங்கிணைத்து ஜனதா கட்சியை உருவாக்கினர். அதைத் தொடர்ந்து அவசர நிலை நீக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற 1977ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸை படுதோல்வி அடையச் செய்து ஜனதா அரசு அமைந்தது. அந்த தேர்தலில் இந்திராவும் அவரது மகன் சஞ்சய் காந்தியும் கூட தோற்றனர்.

இந்திரா அலை
அதன் பின்னர் 80ல் காங்கிரஸ் வென்றாலும் 1984ல் இந்திரா படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட அனுதாப அலையில் காங்கிரஸ் 415 இடங்களை அள்ளியது.

ராஜிவ் அலை
அதைத் தொடர்ந்து 1991ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி மரணத்தைத் தொடர்ந்து அனுதாப அலை வீசி காங்கிரஸ் 244 இடங்களில் வென்றது.

மக்கள் கோப அலை
தற்போது 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான கோப அலை மக்களிடத்தில் இருந்தது. இதை மோடி சுனாமியாக உருமாற்றியது பாஜக.

மோடி சுனாமி
சுழன்றடித்த இந்த மோடி சுனாமியில் காங்கிரஸ் கட்சி தனது வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவுக்கு இரட்டை இலக்கமாக அதுவும் 70 தொகுதிகளைத்தான் எட்ட முடியும் என்கிற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் வழக்கம் போல மாநில கட்சிகளும் வெற்றியை ருசித்திருக்கின்றன.

முதல் முறை
இந்த நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி, பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்தியது. இந்திய தேர்தல் வரலாற்றில் பிரதமர் வேட்பாளரை ஒரு கட்சி முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொண்டது இதுவே முதல் முறை.

3 லட்சம் கிலோ மீட்டர்
தம்மை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது முதல் நாடு முழுவதும் 3 லட்சம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு பல்லாயிரகணக்கான பொதுக் கூட்டங்களில் பங்கேற்று மோடி பிரசாரம் மேற்கொண்டார். நாடு முழுவதும் அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் பெருந்திரளாக திரள மோடி அலை.. மோடி அலை என்றானது. நாளடைவில் இந்த பேரலை ஆழிப்பேரலையாக சுனாமியாகவும் விஸ்வரூபமெடுத்தது.

சமூக வலைதளங்கள்
சுனாமியை உருவாக்கியதில் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களின் பங்கு மிக அதிகம். முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக வலைதள பிரசாரத்துக்கென தனி குழுவையே நியமித்தது மோடி முகாம். இக்குழுவினரின் திட்டமிட்ட இடைவிடாத பிரசாரம் மோடி சுனாமியை உருவாக்கி பாஜகவை அரியணையில் அமர்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications