மோடி முதலில் சுற்றுப்பயணம் செய்யப்போகும் நாடு பெயரை கேட்டால் அதிர்ச்சிதான் மிஞ்சும்
டெல்லி: பிரதமராக பதவியேற்றதும், மோடியின் முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணம் வங்கதேசத்துக்காக இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
வங்கதேசத்தில் இருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் திருப்பியனுப்பப்படுவார்கள் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசிவந்தார். இதற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் நான் நினைத்தால் மோடியின் கால் வங்க மண்ணில் படாமலேயே அப்படியே திருப்பி அனுப்பிவிட முடியும் என்றும் மமதா எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமரானதும் மோடி முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணம் வங்கதேசத்துக்குத்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வங்காள செய்தித்தாள் ஒன்று டெல்லியிலுள்ள வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் வங்கதேச சுற்றுப்பயணத்துக்கு தேவையான ஆயத்தப்பணிகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானை அடக்க வங்கதேசத்துடனான நட்பை பலப்படுத்த மோடி விரும்புவதால் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
பிரச்சாரத்தின்போது இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்த மோடி தற்போது அந்த நாடுகளுடன் இணக்கமாக போவது பதுங்கி பாய்வதற்காகத்தான் என்றும் கூறப்படுகிறது.