மோடியின் வெற்று பேச்சுக்கள் ஏழைகளின் வயிற்றை நிரப்பாது- சோனியா கடும் தாக்கு
மோடியின் வெற்று பேச்சுகளால் ஏழைகளின் பசியை ஆற்ற முடியாது என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
பெங்களூர்: நரேந்திர மோடியின் வெற்று பேச்சுகளால் ஏழைகளின் பசியை ஆற்ற முடியாது என்று சோனியா காந்தி விமர்சனம் செய்தார்.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. தேர்தல் தேதி நெருங்க நெருங்க பிரசாரம் சூடு பிடிக்கிறது.

இன்று விஜயபுராவில் சோனியா காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மோடி ஒரு நல்ல பேச்சாளர், அவர் அதற்கு பெருமைப்பட வேண்டும். எனினும் வெற்று பேச்சுகள் மட்டுமே வயிற்றை நிரப்பாது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். அதை பாஜகவும் மோடியும் எதி்ர்த்தார்கள். நாங்கள் ஏழைகளுக்காக பணியாற்றுகிறோம். கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் ஆட்சி ஏழைகளுக்காக நிறைய நல திட்டங்களை செய்துள்ளது. ஆனால் மத்திய அரசு ஏழைகளுக்கு எதையும் செய்யவில்லை.
கர்நாடகத்தில் உள்ள விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது பிரதமரை சந்திக்க முதல்வர் சித்தராமையா நேரம் கேட்டிருந்தார். ஆனால் பிரதமரோ நேரம் ஒதுக்க மறுத்துவிட்டார். இதன் மூலம் ஏழைகள் மட்டுமல்லாது கர்நாடக மாநில மக்களையே அவமதித்துவிட்டார்.
மோடி எங்கு சென்றாலும் உண்மையையும் வரலாற்றையும் மறைத்து பொய்யான தகவல்களையே பேசி வருகிறார். அவருடைய அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக நம் அரசியல் வரலாற்றில் உள்ள ஹீரோக்களின் பெயர்களை பயன்படுத்திக் கொள்கிறார்.
எல்லாவற்றையும் பேசுவார், ஆனால் முக்கியமானவற்றுக்கு அமைதியாக இருக்கும் முதல் பிரதமர் நரேந்திர மோடிதான். கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றி விட்டார் என்றார் சோனியா.












Click it and Unblock the Notifications