ஒட்டுமொத்த தேசத்தையும் முத்தமிட்டது பருவ மழை!
டெல்லி: தென் மேற்குப் பருவ மழை குறிப்பிட்ட தேதிக்கும் முன்னதாக நாட்டின் மேற்கு பகுதியைத் தொட்டு விட்டது. இதன் மூலம் தேசம் முழுவதையும் தென் மேற்குப் பருவ மழை "டச்" பண்ணி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 15ம் தேதிதான் ராஜஸ்தான், கட்ச் பகுதிகளை பருவ மழை முத்தமிடும். ஆனால் நேற்று முதலே அங்கு நல்ல மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்தப் பகுதிகளை மழை தொட்டு விட்டால் தென் மேற்குப் பருவ மழை தேசம் முழுவதும் பருவ மழை பெய்துள்ளதாக அர்த்தம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுவரை இந்த சீசனில் நாடு முழுவதும் இயல்பை விட கூடுதலாக4 சதவீத மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியத்தைத் தவிர பிற பகுதிகள் அனைத்திலும் இந்த சீசனில் நல்ல மழை பெய்துள்ளது. அதேசமயம், வடகிழக்கு மற்றும் கிழக்கில் 23 சதவீத அளவுக்கு மழை பற்றாக்குறை உள்ளது.
ஜூன் 8ம் தேதி கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கியது. அதன் பின்னர் அது படிப்படியாக நாட்டின் இதர பகுதிகளுக்குப் பரவி தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.