தென்மேற்கு பருவமழை ஜூனில் தொடங்கும்- தென் இந்தியாவில் இயல்பாக இருக்குமாம்!
தென்மேற்கு பருவமழை இந்தியாவில் ஜூன் முதல்வாரத்தில் தொடங்கும் என்றும் நடப்பாண்டு இயல்பான அளவிற்கு மழையிருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
டெல்லி: நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைக்கிறது. கோடை மழை பெய்யும் என்று எதிர்பார்த்தும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் முதல்வாரத்தில் தொடங்கும் என்றும் தென் இந்தியாவில் இயல்பான மழை அளவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். வட இந்தியாவில் பருவமழை பற்றாக்குறையாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
ஆண்டுதோறும், ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். மழையால், தமிழகம், கேரளா உள்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் பலன்பெறும்.
வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர் இறுதிவரை நீடிக்கும். கடந்த ஆண்டு இரு பருவமழைகளுமே ஏமாற்றி விட்டன. தென் இந்தியாவில் குறிப்பாக, கர்நாடகம், தமிழகத்தில் வறட்சி தாண்டவமாடுகிறது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

கோடை வெப்பம்
மார்ச் துவக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. வட இந்தியாவில் 120 பாரன்ஹீட் வரை கொளுத்துகிறது. தமிழ்நாட்டிலும் 113 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே கோடை மழை பெய்கிறது.

பருவமழை
நடப்பாண்டு தென் மேற்கு பருவமழை ஜூன் முதல்வாரத்தில் துவங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். நாடுமுழுவதும் ஒரே சீரான அளவிற்கு மழை பெய்யக்கூடும் என்றும் தென் இந்தியாவில் இயல்பை விட அதிகமாகவே மழை பதிவாகும் என்று கூறி ஆறுதல் அளித்துள்ளனர் வானிலை ஆய்வாளர்கள்.

தென் இந்தியாவில் மழை
வானிலையில் பேரிடர் மேலாண்மை சேவை மையம் நடத்திய கருத்தரங்கத்தில் பேசிய மூத்த வானிலை ஆய்வாளர் கன்டி பிரசாத், தென்மேற்கு பருவமழை தென் இந்தியாவில் அதிக அளவில் பெய்ய வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் வரை பெய்யும் மழை நீடித்து தொடர்ச்சியாக வடக்கிழக்கு பருவமழை அக்டோபரில் ஆரம்பிக்கும் என்றார். நவம்பர் மாதம் பருவமழை வேகமெடுக்கும் என்றும் பிரசாத் கூறியுள்ளார்.

எல் நினோ பாதிப்பு
எல் நினோவின் தாக்கம் காரணமாக மழையில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் இருந்தாலும் கடந்த 1997, 2006 கால கட்டத்தைப் போல பாதிக்காது என்று கூறினார்.
எல் நினோவால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பாதிக்கப்படும். சராசரியை விட குறைவாக மழை பொழிவு இருக்கும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நடப்பாண்டும் இயல்புதான்
கடந்த 2016 நாட்டின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைவாக இருந்ததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 1951 முதல் 2000 வரையிலான இடைப்பட்ட வருடங்களில் நாட்டில் சராசரி தென்மேற்கு மழை 89 செ.மீ ஆக இருந்தது. இந்த நிலையில் நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

வட இந்தியாவில் குறையும்
வட இந்தியாவில் நடப்பாண்டு பருவமழை குறைவாகவே பெய்யும் என்றும் நடப்பாண்டு மழை பற்றாக்குறையாகவே இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர் கூறியுள்ளார். வட இந்தியா மட்டுமல்ல தெற்கு தீபகற்ப பகுதி முழுவதுமே பருவமழை குறைவாகவே இருக்கும் என்றும் கணித்துள்ளனர் ஆய்வாளர்கள்.












Click it and Unblock the Notifications