ராகுல் விலகல்.. காங்கிரஸின் இடைக்காலத் தலைவராகிறார் மோதிலால் வோரா?
டெல்லி: ராஜினாமாவை திரும்ப பெற ராகுல் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து அக்கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமனம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் தலைவராக கடந்த 2017-ஆம் ஆண்டு ராகுல் காந்தி பதவியேற்றார். இவர் பதவியேற்றபின்னர் வடமாநிலங்களில் நடந்த மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரண்டன.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை கூட பெற முடியாமல் பெரும் தோல்வி அடைந்தது.
போராட்டம்
இந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் ராகுல் அப்பதவியில் தொடர பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.
விளக்கம்
இதை ஏற்க மறுத்த ராகுல் காந்தி இன்றைய தினம் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதுகுறித்த விளக்கத்தையும் அவர் அளித்துவிட்டார். இந்த நிலையில் அப்பதவிக்கு வேறு ஒருவரை தானே தேர்வு செய்ய முடியாது என கூறிவிட்டார்.
ம.பி. முதல்வர்
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக கட்சியின் மூத்த தலைவர் மோதிலால் வோரா தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது. 90 வயதான வோரா இரு முறை மத்திய பிரதேச முதல்வராகவும் , உத்தரப்பிரதேச ஆளுநராகவும் பதவி வகித்தார்.
விரும்பவில்லை
தற்போது மாநிலங்களவை எம்பியாக உள்ளார். காரிய கமிட்டியின் உறுப்பினர்களாக உள்ள மன்மோகன் சிங், ஏ கே அந்தோணி, மோதிலால் வோரா ஆகியோரில் ஒருவரை இடைக்கால தலைவராக நியமிக்க மூத்த தலைவர்கள் விரும்பினர். இவர்களில் மன்மோகனுக்கும் அந்தோணிக்கும் இடைக்காலத் தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை.
புதிய தலைவர்
இதனால் வோராவை ஏற்குமாறு நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதையடுத்து சோனியாகாந்தியின் ஆலோசனைபடி வோரா இடைக்கால தலைவராக நியமிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு நியமிக்கப்படும் இடைக்காலத் தலைவர் மற்ற நிர்வாகிகள், மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து காங்கிரஸுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வர்.
செயல்தலைவர்
மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சுஷில்குமார் ஷிண்டே, அசோக் கெலாட் ஆகியோரில் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவோ செயல்தலைவராகவோ நியமிக்கப்படுவர் என தெரிகிறது.