என்னை எதிர்த்துப் பேச மிஷல் பயப்படவே மாட்டார்... ஒபாமா
டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய பயணத்தின் கடைசி நிகழ்வாக ஆற்றிய உரையில், எல்லா பெண்களும் வலிமையும், திறமையுமானவர்கள். என்னை எதிர்த்து பேச என் மனைவி பயப்படவே மாட்டார் என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தினார்.
அவர் தனது இந்திய பயணத்தின் கடைசி நிகழ்ச்சியாக, நேற்று ஸ்ரீ போர்ட் அரங்கத்தில், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடையே பேசினார்.
அப்போது அவர் பெண்களைப் பற்றியும், தன்னுடைய மனைவி பற்றியும் உயர்வாக உரையாற்றினார்.
ராணுவத்தில் பெண்கள்:
அதில், "எனது இந்திய பயணத்தில் எனக்கு பிடித்த விஷயம், ராணுவத்தில் பெண்களை பார்த்ததுதான். குடியரசுத்தலைவர் மாளிகையில் எனக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதைக்கு தலைமை தாங்கியவரும் ஒரு பெண்தான்.
ஆட்சியிலும் பெண்கள்:
இந்தியாவில், ஆட்சி நடத்துவது உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தங்களால் சாதிக்க முடியும் என்று பெண்கள் காண்பித்துள்ளனர். தலைவர்களில் பலர் பெண்கள்தான். இந்தியாவின் முன்னேற்றத்தில் இளம்பெண்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள்.
திறமைகளைப் புறக்கணிக்காதீர்:
பெண்கள் முன்னேறினால்தான் அந்த நாடும் முன்னேறும் என்பதை நாம் அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கிறோம். ஒரு நாடு முன்னேற விரும்பினால், பெண்களின் திறமைகளை புறக்கணிக்கக்கூடாது.
கண்ணியமான நடவடிக்கை:
பெண்களுக்கு சுதந்திரமும், உரிமையும் கிடைப்பதை ஆண்கள் உறுதிப்படுத்த வேண்டும். நமது மகன்களுக்கு கிடைக்கும் அதே வாய்ப்புகள், மகள்களுக்கும் கிடைக்க வேண்டும். பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்.
என் மனைவி வலிமையானவள்:
நான் ஒரு வலிமையான, திறமையான பெண்ணைத்தான் திருமணம் செய்துள்ளேன். என் மீது தவறு இருப்பதாக என் மனைவி கருதினால், என்னை எதிர்த்து பேச பயப்படவே மாட்டார்.
அழகான பெண்கள்:
என்னை சுற்றி எப்போதும் அழகான பெண்கள் உள்ளனர். என் மனைவியையும், 2 மகள்களையும்தான் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.