பாஜகவில் இன்று யாசின் கூட்டாளி சபீர் அலி.. நாளை தாவூத்தா? முக்தார் அப்பாஸ் நக்வி கடும் எதிர்ப்பு!!
பீகாரில் ஆளும் ஜக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சபீர் அலி. ராஜ்யசபா எம்.பி.யான அவர் கடந்த சில நாட்களுக்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது, பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டியிருந்தார்.
மேலும் குஜராத்தில் நடந்த வன்முறைகளுக்கும் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக கூறுவது தவறு என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஐக்கிய ஜனதா தளம் அவரை கட்சியை விட்டும் நீக்கியது.
இந்நிலையில் சபீர் அலி தமது ஆதரவாளர்களுடன் நேற்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் இஸ்லாமிய முகமாக இருக்கும் அக்கட்சியின் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதே சபீர் அலியின் மும்பை இல்லத்தில்தான் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த யாசின் பட்கல் கைது செய்யப்பட்டார். அத்துடன் பாலிவுட் தயாரிப்பாளர் குல்ஷன் குமார் கொலை வழக்கிலும் சபீர் அலி மீது குற்றம்சாட்டப்படுகிறது. இப்படிப்பட்ட ஒருவரை பாஜகவில் சேர்ப்பதா? என்று நக்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன் உச்சமாக தமது ட்விட்டர் பக்கத்தில், பயங்கரவாதி பட்கலின் நண்பர் இன்று பாஜகவில் சேர்ந்துவிட்டார். விரைவில் தாவூத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று சாடியிருக்கிறார்.
அண்மையில்தான் ஹிந்து வன்முறை அமைப்பான ஸ்ரீராம் சேனாவின் முத்தலிக் பாஜகவில் சேர்ந்தார். ஆனால் கட்சியில் மிகக் கடும் எதிர்ப்பு உருவானதால் அவரை சேர்ந்த உடனேயே நீக்கியது பாஜக மேலிடம் இப்போது சபீர் அலியை சேர்த்திருப்பதும் பிரச்சனையை உருவாக்கியுள்ளது.
திடீர் நீக்கம்..
இதனிடையே முக்தார் அப்பாஸ் நக்வி தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த இக்கருத்தை நீக்கிவிட்டார். அவரைப் போல பாஜகவில் பலரும் சபீர் அலியை சேர்த்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சபீர் அலி விவகாரத்தில் பாஜக இன்று முக்கிய முடிவு எடுக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.