மும்பை அதிவேக ரயில் திட்டம் தோல்வி... அதிகாரிகளின் ஏமாற்று வேலையை காட்டிகொடுத்த ஆர்டிஐ
மும்பை புறநகருக்கு அதிவேக ரயிலை இயக்கும் திட்டம் தோல்வியடைந்து விட்டதாக தகவலறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மும்பை: காதிமான் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இணையாக மும்பையில் புறநகர் ரயிலை இயக்கும் திட்டம் தோல்வியில் முடிந்ததாகவும், இதனால் 60கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவலறியும் உரிமை சட்டத்தில் மூலமாக தெரியவந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ. மனுவின் மூலம், மும்பை ரயில்வே விகாஸ் கார்பரேஷன், லக்னோவில் உள்ள ரெயில்வே வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு ஆகியவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டின் அதிகவேக காதிமான் எக்ஸ்பிரஸ் ரெயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இந்த வேகத்தை விட சற்று குறைச்சலாக 145 கிலோமீட்டர் வேகத்தில் மும்பையில் புறநகர் ரெயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டது.
கடந்த 2012ம் ஆண்டு இந்த அதிவேக புறநகர் ரயிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தூரிதமாக பணி நடைபெற்றதை பார்த்து விரைவில் அதிவேக ரயில் பயன்பாட்டிற்கு வரும் என்று அனைத்து தரப்பினரும் நம்பி வந்தனர். இதற்காக சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் இருந்து பிரத்யேகமாக ரயில் பெட்டிகள் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. தனியாக ரயில் இருப்பு பாதைகள், சிக்னல்கள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டன.
பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், குறிப்பிட்ட அந்த தண்டவாள பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மும்பை நகர், விரார், தஹானு ஆகிய இடங்களுக்கு இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் தோல்வியில் முடிந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. எதிர்ப்பார்த்த வேகத்தில் ரயிலை இயக்க முடியாததால் சாதாரண வேகத்திலேயே தான் ரயில் செலுத்த முடியும் என்பதையும், 80கிலோ மீட்டர் வேகத்தை கூட தாண்ட முடியாது என்பதையும் அதிகாரிகள் உணர்ந்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்த திட்டம் கைவிடப்பட்டு தற்போது, அதிவேக ஓட்டத்துக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ரயில் பணிமனையில் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சிக்காக ரூ.60 கோடியை செலவு செய்து, அது வீணாய் போனதை ரயில்வே அதிகாரிகள் மறைத்த நிலையில், மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ. மனுவின் மூலமாக தகவல் வெளியாகியுள்ளது.