ரம்ஜானை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு.. ஆந்திர அரசு அதிரடி சலுகை! என்ன தெரியுமா?
அமராவதி: ஆந்திராவில் ரம்ஜான் மாதத்தையொட்டி முஸ்லிம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு மணிநேரத்துக்கு முன்பாக வீட்டுக்கு செல்லலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி அம்மாநில முஸ்லிம் அரசு ஊழியர்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டி அரசு சலுகை ஒன்றை வழங்கி உள்ளது.

ஒருமணி நேரம் முன்னதாக
அதன்படி ரம்ஜான் மாதமான ஏப்ரல் 3ம் தேதி முதல் மே மாதம் 2ம் தேதி வரை முஸ்லிம் ஊழியர்கள் ஒரு மணிநேரம் முன்னதாக வீட்டுக்கு செல்லலாம் எனும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் சமீர் ஷர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆசிரியர்கள் உள்பட...
மாநிலத்தில் அரசு பணியில் நிரந்தரமாக, ஒப்பந்த அடிப்படையில் மற்றும் அவுட்சோர்சிங் முறையில் பணிபுரிந்து இஸ்லாமை பின்பற்றும் அனைவரும் தங்கள் அலுவலகங்களில் இருந்து ஒருமணிநேரம் முன்பு கிளம்பி செல்லலாம். இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கும் பொருந்தும்.

நகல் அனுப்பி வைப்பு
இந்த நடைமுறை 03.04.2022 முதல் 02.05.2022 வரை அமலில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் தேவை ஏற்படும்போது தவிர பிற நேரங்களில் ஒரு மணிநேரத்துக்கு முன்பு வீட்டுக்கு செல்லலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நகல் அனைத்து துறை செயலாளர்கள், துறை சார்ந்த தலைமை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், பள்ளி கல்வித்துறை கமிஷனர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாராட்டு
இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிரான செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications