முசாபர்நகர் கலவரம்...எம்.பி, எம்.எல்.ஏக்கள் உட்பட 16 அரசியல்வாதிகளுக்கு அரெஸ்ட் வாரண்ட்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் கலவரம் தொடர்பாக எம்.பி. எம்.எல்.ஏக்கள் உட்பட 16 அரசியல்வாதிகளுக்கு எதிராக நீதிமன்றம் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் இரு பிரிவினரிடையேயான மோதலில் 50 பேர் பலியாகினர். 40 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறினர்.
இந்த நிலையில் மோதலை தூண்டிவிட்டதாக எம்.பி, எம்.எல்.ஏக்கள் உட்பட 16 அரசியல்வாதிகளுக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் 16 பேருக்கும் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டோரில் பாஜக எம்.எல்.ஏக்கள் சங்கீத் சோம், பி. சிங், பாரதிய கிஷான் தலைவர்கள் ராகேஷ் திலக், நரேஸ் திலக், பகுஜன் சமாஜ் எம்.பி. கதிர் ரெய்னா, பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள் நூர் சலீம் ரானா, ஜமீல் அகமது, காங்கிரஸ் கட்சியின் சைதுஜமா ஆகியோரும் அடங்குவர்.
கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 48 மணி நேரம் கடந்த நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை. கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் பலர் சட்டசபை நடவடிக்கையில் கலந்து கொண்டிருந்தனர். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் இரண்டு நாட்களாக அமளியில் ஈடுபட்டனர்.
முசாபர்நகர் கலவரத்துக்குப் பொறுப்பேற்று அகிலேஷ் யாதவ் அரசு பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.