ரேபரேலி தொகுதியில் சோனியாதான் போட்டியிடுவார், நானில்லை... சொல்வது பிரியங்கா காந்தி
அம்மாவின் தொகுதியான ரேபரேலி தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் தனது அம்மா சோனியாதான் போட்டியிடுவார் என்றும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
டெல்லி: தான் தேர்தலில் போட்டியிட மாட்டேன், குறிப்பாக ரேபரேலி தொகுதியில் போட்டியிட மாட்டேன், அங்கே எனது அம்மாதான் போட்டியிடுவார் என்று சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தியின் பதவிக்காலம் முடிவடைந்ததால், புதிய தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக தலைவர் பொறுப்பை
இன்று ஏற்றுள்ளார்.
தீவிர அரசியல் மற்றும் கட்சிப்பணிகளில் இருந்து விலகி இருக்க சோனியா காந்தி முடிவு செய்திருப்பதாக கூறியதை அடுத்து ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று தகவல் வெளியானது.
ரேபரேலி தொகுதி
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதி நேரு குடும்பத்து தலைவர்களின் பிரியமான தொகுதியாக உள்ளது.1967ஆம் ஆண்டு இந்திரா காந்தி முதன் முதலாக இந்த தொகுதியில் இருந்துதான் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.
ராகுலுக்கு விட்டுக்கொடுத்த சோனியா
அமேதி தொகுதியில் போட்டியிட்டார் ராஜீவ் காந்தி அவரது மறைவுக்குப் பிறகு சோனியா காந்தி தொடர்ந்து வெற்றி பெற்றார். 2004ம் ஆண்டு தேர்தலில் அமேதியை ராகுலுக்கு விட்டு கொடுத்து ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார் சோனியா காந்தி.
செல்லப்பிள்ளை
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 2004, 2006, 2009 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இந்த தொகுதியில் நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக 4 தடவை வென்று எம்.பி. ஆக உள்ளார். இந்த தொகுதியில் தனது தாய் பிரியங்காவிற்காக பிரசாரம் செய்வார் பிரியங்கா காந்தி. இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு வரப்போகும் லோக்சபா தேர்தலில் அவர் மீண்டும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவாரா? என்ற கேள்வி
எழுந்தது.
போட்டியிட மாட்டேன்
இந்நிலையில், அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், அவரது ரேபரேலி தொகுதியில் ராகுலின் சகோதரியும் சோனியாவின் மகளுமான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. சோனியா காந்தியின் நிழலாக கடந்த பல ஆண்டுகளாக பிரியங்கா காந்தி இருந்து வருவதால் அவரையும் அரசியலில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ரேபரேலி தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளார் பிரியங்கா.
சோனியாதான் போட்டி
எனது தாய் மிகவும் தைரியசாலி. அவர்தான் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார். நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற கூறியில்லை என்று கூறியுள்ளார் பிரியங்கா காந்தி.
அம்மாவின் தைரியமான செயல்பாடுகளே அவரை வெற்றி பெற வைக்கும் என்று கூறியுள்ளார்.
ராகுல்காந்திக்கு ஆதரவு
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல்காந்தி கடினமான பாதையில் பயணிக்க வேண்டும் என்று தெரியும். ஆனால் அவர் தைரியத்துடன் எதையும் எதிர்கொள்வார் என்று கூறிவிட்டு புன்னகைக்கிறார் பிரியங்கா காந்தி. பிரியங்காவின் சாயல் பாட்டி இந்திரா போல இருப்பதால், அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் இதுநாள்வரை தாயின் நிழலாக இருந்த பிரியங்கா, இனி அண்ணன் ராகுலுக்கும் அரசியலில் நிழலாக உதவ வேண்டும் என்றே விரும்புகிறார் என்று கூறுகின்றனர் அவரை அறிந்தவர்கள்.