Mamata Vs CBI: 2வது நாளாக நீடிக்கிறது மமதாவின் சத்தியாகிரகம்... பிப்.8 வரை நடத்துவதாக அறிவிப்பு
கொல்கத்தா:பிப்ரவரி 8ம் தேதி வரை போராட்டம், பேரணிகள் தொடரும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 'ரோஸ் வேலி', 'சாரதா சிட்பண்ட்ஸ்' ஆகிய இரு நிதி நிறுவனங்களின் மோசடி தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜீவ் குமார் விசாரணை நடத்தினார். அவர் தற்போது கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருகிறார்.
மோசடி வழக்குகளை முறையாக விசாரிக்கவில்லை என்று கூறப்பட்டதால். விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க பலமுறை சிபிஐ சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை.
எனவே, ராஜீவ் குமாரை விசாரிக்க, சிபிஐ அதிகாரிகளில் ஒரு பிரிவினர், அவரது இல்லத்துக்கு சென்றனர். அவர்களை அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, முறையான ஆவணங்கள் இருக்கிறதா என்று கேட்டபோது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், சிபிஐ அதிகாரிகளை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் நேற்று இரவில் இருந்து முதல்வர் மம்தா பானர்ஜி, அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்' என்ற பெயரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
போராட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் சாவதற்கு தயார். ஆனால் ஒருபோதும் மோடி அரசுக்கு அடிபணிய மாட்டேன். நாட்டில் அவசரநிலையை அமல்படுத்த நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
தேசத்தை, ஜனநாயகத்தை, அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் வரையில் எனது சத்தியாகிரகப் போராட்டம் தொடரும். பள்ளித்தேர்வுகள் துவங்கும் வரை தர்ணா போராட்டம் நீடிக்கும். அதாவது பிப்ரவரி 8ம் தேதி வரை பேரணிகள், போராட்டங்கள் தொடரும்.
ஜனநாயகம் சீர்குலைந்ததற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசே காரணம். பாஜகவை எதிர்ப்பவர்களை சிறையில் அடைப்பது தான் தற்போதைய மத்திய அரசின் நோக்கம் .
நான் நடத்தி வரும் இந்த போராட்டம் அமைதியான, சத்தியாகிரக போராட்டம். இப்போதுள்ள சூழ்நிலையில் சிபிஐ மீது யாருக்கும் நம்பிக்கையில்லை. அனைத்து அரசியல் சட்ட அமைப்புகளையும் மோடி அரசு தகர்த்து வருகிறது. எதிர்க் கட்சிகளை ஒழிக்க பாஜக தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது என்று மமதா கூறினார்.