அகமதாபாத் பார்க்கில் திடீரென தோன்றிய மோனோலித் மர்ம உலோகத்தூண் - ஆர்வத்துடன் செல்பி எடுத்த மக்கள்
உலகெங்கிலும் பல நகரங்களில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்திய மோனோலித் மர்ம உலோகத் தூண் இப்போது குஜராத்திலும் தென்பட்டுள்ளது. திடீரென தோன்றிய மர்ம தூண் முன்னால் நின்று பலரும் செல்பி எடுத்தனர்.
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் உள்ள பூங்காவில் மர்ம உலோகத்தூண் தோன்றியுள்ளது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்ற மர்மம் நீடிக்கிறது. மோனோலித் உலோகத்தூண் உலகெங்கிலும் பலரையும் பீதியில் ஆழ்த்திய நிலையில் குஜராத் பூங்காவில் தோன்றிய மர்ம தூண் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த தூணின் முன்னால் நின்று பலரும் ஆர்வத்துடன் செல்பி எடுத்துச்சென்றனர்.
Recommended Video
உலகத்தில் பல நாடுகளில் திடீரென தோன்றிய மோனோலித் எனப்படும் மர்ம உலோகத்தூண் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் 18ஆம் தேதி அமெரிக்காவின் உடா பாலைவனத்தில் உலகில் முதன் முறையாக மோனோலித் எனப்படும் மர்ம தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தூண் திடீரென மறைந்தது.
அடுத்தடுத்த சில நாட்களில் ருமேனியா, அமெரிக்காவின் கலிபோர்னியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, போலந்து என பல்வேறு நாடுகளில் மர்ம தூண்கள் தோன்றின. இந்த தூண்கள் அங்கு எப்படி வந்தன எந்த மர்மம் நீண்ட நாட்களாக நீடித்தன. அந்த தூண்கள் தோன்றியது போலவே மாயமானது.
மர்ம உலோகத்தூண்
இங்கிலாந்தில் ஏற்கனவே மூன்று பகுதிகளில் தூண் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மெர்ரி மெய்டன்ஸ் சர்கிள் நடுவில் நான்காவது மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணம் கிரானிச்சென் நகரில் உள்ள லைபெக் கோட்டைக்கு வெளியே மர்ம உலோக தூண் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தூண்கள் எல்லாம் அடுத்தடுத்து மாயமாகின.
குஜராத் பூங்காவில் மர்ம தூண்
உலகெங்கிலும் கிட்டத்தட்ட 30 நகரங்களில் திடீரெனத் தோன்றி பரபரப்பை ஏற்படுத்திய இந்த மர்ம உலோகத் தூண் போன்று குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரத்தில் உள்ள பூங்காவில் இந்த மர்மமான உலோகத்தூண் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் எப்படி
6 அடி உயரம் கொண்ட அந்த உலோகத்தூண் அகமதாபாத்தின் தால்தேஜ் பகுதியில் உள்ள சிம்பொனி பூங்காவில் தோன்றியது. அந்த தூணை வைப்பதற்காக பூமியில் தோண்டப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. ஒரே நாளில் அந்த தூண் வைக்கப்பட்டது எப்படி என்று தெரியாமல் ஆச்சரிப்படுகிறார் பூங்கா தோட்டக்காரர் ஆசாராம்.
பரவிய வதந்தி
அகமதாபாத் பூங்காவில் தோன்றிய மர்ம உலோகத்தூண் பற்றிதான் பலரும் பரபரப்பாக பேசி வருகின்றனர். இதனையடுத்து பூங்காவிற்கு படையெடுத்த மக்கள் தூண் முன்பாக நின்று செல்பிக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
பூங்கா பராமரிப்பு
இந்த மர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனியார் நிறுவனம்தான் அகமதாபாத் பூங்காவில் உலோகத்தூணை நிறுவியதாக தெரிவித்தது. இதனையடுத்து உலோகத்தூண் பற்றிய பரபரப்பு முடிவுக்கு வந்தது. பூங்காவை விரிவாக்கம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள தனியார் நிறுவனத்தால் இந்த உலோகத்தூண் நிறுவப்பட்டதாக அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் பூங்காக்கள் மற்றும் தோட்ட உதவி இயக்குநர் திலிபாய் படேல் தெரிவித்துள்ளார்.
நீடிக்கும் மர்மம்
நியூ மெக்சிகோவில் உள்ள ‘தி மோஸ்ட் பேமஸ் ஆர்ட்' என்ற கலைக் குழு, உடா பாலைவனத்தில் தூணை வைத்ததாக கூறியது . ஆனால் மற்ற நாடுகளில் தாங்கள் நிறுவவில்லை என தெரிவித்துள்ளது. உலகையே பீதியில் ஆழ்த்தியுள்ள இந்த மர்ம தூண்கள் நிறுவியது யார் என்ற மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது. ஏலியன்களால் இந்த தூண்கள் நிறுவப்பட்டிருக்கலாம் என்று பலரும் கதை கட்டிவிடுகின்றனர். மோனோலித் தூண்களைப் பற்றிய மர்மம் எப்போது விலகும் என்று தெரியவில்லை.