இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தினர் கிரிக்கெட் வாரியத்தில் இருக்க தடை: சுப்ரீம் கோர்ட்!!
டெல்லி: என்.சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையோர் எவருமே இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இடம்பெறக் கூடாது என்று உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
ஐ.பி.எல்.பிக்ஸிங் தொடர்பான முத்கல் கமிட்டி அறிக்கை மீது உச்சநீதிமன்றத்தில் இன்றும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது உச்சநீதிமன்றம் அதிரடியான சில பரிந்துரைகளை முன்வைத்தது.
பிக்ஸிங் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நடப்பு ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது; இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவராக சுனில் கவாஸ்கர் அல்லது மூத்த வீரர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறியது.
அத்துடன் தற்போதைய கிரிக்கெட் வாரியத் தலைவர் என்.சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையோர் எவருமே இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இடம்பெறக் கூடாது என்றும் கூறியது.
இந்தியா சிமெண்ட்ஸின்.. சீனி, டோணி, சுந்தர்ராமன்
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சீனிவாசன், கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கிறார்.
இந்தியா சிமெண்ட்ஸ்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பணியாளராக இருக்கும் டோணிதான் இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார்.
அதேபோல் ஐ.பி.எல். போட்டிகளை முன்னின்று நடத்துகிற சுந்தர் ராமனு, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்.
சீனி, டோணியால் தடை
இவர்களில் சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பகிரங்கமாக தெரிவித்த கையோடு, கவாஸ்கர் அல்லது மூத்த வீரரை கிரிக்கெட் வாரியத் தலைவராக நியமிக்க பரிந்துரைத்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் இந்தியா சிமெண்ட்ஸ் பணியாளர் என்பதற்காகத்தான் பிக்ஸிங்கில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பனை பாதுகாக்கும் வகையில் பொய்யான வாக்குமூலத்தை கேப்டன் டோணி கொடுத்தார் என்றும் உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்தே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எவருமே கிரிக்கெட் வாரியத்தில் இடம்பெறக் கூடாது என்ற பரிந்துரையை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.