மக்களை பாதிக்கும் பந்த் வேண்டாம்: நாராயணசாமி வேண்டுகோள்
டெல்லி: மத்திய அமைச்சர் நாராயணசாமியின் காரில் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நாளை மறுதினம் புதுச்சேரியில் கடையடைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி பந்த் போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
புதுவை எல்லையம்மன் கோவில் வீதியிலுள்ள எனது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த என் மகனின் காருக்கு கீழே சில சமூக விரோத சக்திகளால் வைக்கப்பட்டிருந்த அதிக சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டு புதன்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு புதுவையில் ஒரு அசாதாரண சூழலை உருவாக்கி இருப்பது குறித்து பெரிதும் வருந்துகிறேன்.
இச்சம்பவம் குறித்து அறிந்ததும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் பேரியக்க தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், வியாபாரிகள், பொதுநல அமைப்பினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் என் வீட்டுக்கு திரண்டு வந்திருந்து தங்கள் அதிர்ச்சியை தெரிவித்தனர். அனைவரின் அன்பிற்கும், பாசத்திற்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
இதன் தொடர்ச்சியாக, இந்த வெடிகுண்டு கலாச்சாரத்துக்கு தங்கள் எதிர்ப்பை மேலும் தெரிவிக்கும் வண்ணம், வரும் பிப்ரவரி 1-ந் தேதி சனிக்கிழமை புதுவை மாநிலம் தழுவிய பந்த் நடத்திட, காங்கிரஸ் பேரியக்க தலைவர்களும், தொண்டர்களும் முடிவு செய்திருப்பதை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக டெல்லியில் தற்போது உள்ள நான் அறிந்தேன்.
அவர்களின் உணர்வுகளுக்கு நான் மதிப்பளிக்கும் அதே நேரம், பந்த் நடத்துவதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, அந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தற்போது திருமணம் மற்றும் சுபகாரியங்கள் நடைபெற்று வரும் சூழலில், மாணவர்களின் தேர்வு காலமாக இருந்து வரும் நிலையில் பந்த் நடத்துவது என்பது அவர்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். வியாபாரிகள் உள்ளிட்ட பிற தரப்பு மக்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும்.
இதனை மனதில் கொண்டு, காங்கிரஸ் பேரியக்கத்தின் பாரம்பரியத்தின்படி தொண்டர்களும், தலைவர்களும் அறவழியில், காந்திய வழியில் தங்கள் உணர்வுகளை எதிர்ப்பினை வெளிப்படுத்தும் தருணம் இது. எனவே வரும் பிப்ரவரி 1-ந் தேதி அமைதியான வழியில் உண்ணா நோன்பு மேற்கொண்டு மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் ஒன்று கூடி தங்கள் உணர்வுகளை அமைதியான வழியில் வெளிக்காட்டிட அன்புடன் வேண்டுகிறேன். அதுவே நம் காங்கிரஸ் பேரியக்கத்தின் பாரம்பரியத்தை கட்டிக்காப்பதாக இருக்கும்.
என் அன்பான இந்த வேண்டுகோளுக்கு காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் செவி மடுத்து பிப்ரவரி 1ம் தேதி‘பந்த்' நடத்துவது வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன் இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.