மோடி கவலைப்படத் தேவையில்லை.. தீவிரவாதிகள் கைது குறித்து ஷிண்டே பேச்சு
டெல்லி: நான்கு இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் கைது செய்ய்பட்டுள்ளது தொடர்பாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கவலைப்படத் தேவையில்லை என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
இந்தக் கைதின் பின்னணியில் மோடி உள்பட எந்தத் தலைவருக்கு எதிராகவும் மிரட்டல் இல்லை என்றும் ஷிண்டே கூறியுள்ளார். அதேசமயம், இந்தக் கைதானது, மிகப் பெரிய வெற்றி என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மோடி கவலைப்படத் தேவையில்லை. இது மிகப் பெரிய கைது. அதேசமயம், மோடி உள்பட எந்தத் தலைவருக்கும் ஆபத்து இல்லை. யாருக்கும் கொலை மிரட்டல் இல்லை. யாருக்கு எதிராகவும் சதி இல்லை. அனைத்துத் தலைவர்களுக்கும் தேவையான அளவுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றார் ஷிண்டே.
கைதானவர்களில் முக்கியமான நபர் வக்கா. இது மிகப் பெரிய வெற்றியாகும். இதன் மூலம் மேலும் பல தீவிரவாதிகள் பிடிபடுவார்கள் என்று நம்புகிறோம் என்றார் ஷிண்டே.
வக்கா குறித்து ஷிண்டே கூறுகையில், வக்கா நாட்டில் நடந்த பல தீவிரவாத செயல்களில் தொடர்பு கொண்டவன் ஆவான். அவனது கைது முக்கிய திருப்புமுனையாகும் என்றார்.
24 வயதான வக்கா, பாகிஸ்தானைச் சேர்ந்தவன். 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முறையாக இந்தியாவுக்கு வந்தான். அவனுடன் ஹாடி என்கிற அசதுல்லா அக்தர் என்பவரும் வந்தான். அக்தரும், யாசின் பக்தகலும் சேர்த்து ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.