சூரத் பட்டா.. பனாரஸ் பட்டா...இப்ப எந்த சேலைக்கு வக்காலத்து வாங்குவார் மோடி??
வாரணாசி: நரேந்திர மோடிக்கு ஒரு நூதனமான தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. வாரணாசி தொகுதியில் போட்டியிடப் போகும் அவர், காலம் காலமாக கடுமையான போட்டியில் இருந்து வரும் குஜராத்தின் சூரத் பட்டைப் புகழ்ந்து பேசுவாரா அல்லது தான் போட்டியிடப் போகும் பனாரஸ் (வாரணாசி) பட்டுக்குப் பரிந்து பேசுவாரா என்ற சுவாரஸ்யமான கேள்வி எழுந்துள்ளது.
தங்களது பட்டுத் தொழில் நசிந்து போவதற்கு முக்கியக் காரணமே சூரத்தில் உள்ள பட்டு நெசவாளர்கள்தான் என்பது பனாரஸ் பட்டு நெசவாளர்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில் எந்த பட்டு நெசவாளர்களுக்குப் பரிந்து பேசுவார் மோடி என்ற கேள்வி எழுந்துள்ளது. இருவரில் யாரையுமே புகழ்ந்து பேசவும் முடியாது, யாரையும் குறைத்த மதிப்பிடவும் முடியாது.
வாரணாசி பட்டு நெசவாளர்களின் ஓட்டு வேண்டும் என்றால் அவர்களின் குற்றச்சாட்டை ஏற்க வேண்டும் மோடி. ஆனால் அப்படிச் செய்தால் சூரத்தில் சூறாவளி கிளம்பி விடும்..
பனாரஸை காப்பி அடிக்கும் சூரத்
பனாரஸ் பட்டுச் சேலைகளை அப்படியே காப்பி அடித்துத்தான் சூரத்தில் பட்டு ஜவுளித் தொழிலில் நெசவாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதுதான் மெயின் குற்றச்சாட்டே.
விலையும் மலிவு
மேலும் சூரத்தில் தயாராகும் பட்டுச் சேலைகள், பனாரஸ் பட்டுச் சேலைகளை விட விலையும் குறைவாகும். இதனால்தான் பனாரஸ் பட்டுச் சேலைகளை விட சூரத் சேலைகள் அதிகம் விற்பனையாகிறதாம்.
சூரத் எழுச்சியால் வீழ்ந்த பனாரஸ்
இப்படி தங்களது பட்டுச் சேலைகளைக் காப்பி அடித்து விலையையும் குறைத்து சூரத் நெசவாளர்கள் விற்பதால்தான் பனாரஸ் சேலைகளின் விற்பனை வீழ்ச்சி அடைந்ததாக குமுறுகிறார்கள் பனாரஸ் நெசவாளர்கள்.
பனாரஸ்தான் சிறந்த பட்டு
அதேசமயம், பனாரஸில் தயாராகும் பட்டுத் துணிகள்தான் சிறப்பானவை, நேர்த்தியானவை. சீனத்துப் பட்டைப் பயன்படுத்தி இவர்கள் இயற்கையான முறையில் நெய்கிறார்கள். ஆனால் சூரத்திலோ, விசைத்தறிகளைப் பயன்படுத்தி நெய்கிறார்கள். இதனால் பனாரஸ் பட்டுக்குத்தான் ஆயுள் ஜாஸ்தி. ஆனால் சூரத்காரர்கள் விலையைக் குறைத்து மார்க்கெட்டைப் பிடித்து விட்டார்கள்.
அப்படியே பனாரஸ் மாதிரியே
சூரத்தில் விசைத்தறிகளை அதிக அளவில் பயன்படுத்துவதால் அதிக அளவில் பட்டுத் துணிகளை அவர்கள் குறுகிய காலத்தில் தயாரித்து விடுகிறார்கள். விலையும் குறைவாக இருப்பதால் அங்கு மவுசு மாறி விட்டது. ஆனால் தரத்தையே கருத்தாக கொண்டு செயல்படும் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள் பனாரஸ் நெசவாளர்கள்.
ஐந்து மடங்கு விலை குறைவு
பனாரஸில் தயாராகும் துணிகளின் விலையை விட சூரத்தில் ஐந்து மடங்கு விலை குறைத்து விற்கிறார்களாம்.
டிசைன் திருடர்கள்
சூரத்தைச் சேர்ந்த பட்டுத் துணி நெசவாளர்களும், வியாபாரிகளும் பனாரஸ் அல்லது மும்பைக்குப் போய் பனாரஸ் துணிகளை வாங்கி அதன் டிசைனை திருடி அப்படியே காப்பி அடித்து விடுகிறார்களாம்.
மோடி என்ன பேசப் போறாரோ
இப்போது வாரணாசியில் போட்டியிடுகிறார் மோடி. இதனால் அவருக்கு பெரும் தர்மசங்கடமாகியுள்ளது. பனாரஸ் பட்டு நெசவாளர்கள் மனதை அவர் எப்படிக் கவரப் போகிறார் என்ற ஆர்வமான எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.