உலக மகளிர் தினம்: 1,500 டீக்கடைகளில் மோடி கலந்துரையாடல்
டெல்லி: மகளிர் தினத்தன்று சர்வதேச அளவில் 1,500 டீக்கடைகளில் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மோடி கலந்துரையாடுகிறார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க. ‘நமோ' டீக்கடைகளை நாடுதோறும் அமைத்து பிரசாரம் செய்து வருகிறது. இதற்கு மக்களிடையே பெருமளவு வரவேற்பு உள்ளது.
டீ கடைகளில் டீ சாப்பிட வருபவர்களுடன் பிரதமர் வேட்பாளர் கலந்துரையாடினால் எப்படி இருக்கும் என்று யோசித்த பாஜக அதை வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டியுள்ளது.
1000 டீ கடைகளில் பேசிய மோடி
பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி, கடந்த மாதம் 1000 டீ கடைகளில் டீ குடிக்க வருபவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சி வெற்றியடைந்ததை தொடர்ந்து இதனை விரிவுபடுத்த பா.ஜ.க. திட்டமிட்டது.
மகளிர் தினத்தில் மோடி
மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தையொட்டி, சர்வதேச அளவில் இந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, 15 வெளிநாடுகளில் உள்ள 30 இடங்கள் உள்பட மொத்தம் 1,500 இடங்களில் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பெண்கள் மேம்பாடு
டெல்லியில் இருந்து நரேந்திரமோடி டீக்கடை வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். கடந்த முறை சிறந்த நிர்வாகம் பற்றி பேசிய அவர் இந்த முறை பெண்கள் மேம்பாடு பற்றி பதில் அளிக்க உள்ளார்.
இடங்கள் தேர்வு
மகளிர் தினத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கான இடங்கள் விரைவில் முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி தெரிவித்துள்ளார்.