கேட்டாரே பாருங்க ஒரு கேள்வி! சந்தைக்கு விசிட் செய்த அஜித் தோவலை ஸ்டன்னாக்கிய காஷ்மீர் ஆட்டு வியாபாரி
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், அம்மாநிலத்தில் முகாமிட்டுள்ளார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல். இன்று அவர், தீவிரவாதிகள் தாக்கம் அதிகம் உள்ள அனந்த்நாக் நகரை சென்றடைந்தார். இங்கே அவர் உள்ளூர் மக்களை சந்தித்து உரையாடினார்.
பக்ரித் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அங்கு செம்மறியாடு சந்தையில் விற்பனை சூடு பிடித்துள்ளது. செம்மறியாடு சந்தைக்கு தோவல் திடீரென விசிட் அடித்தார்.
ஆடு விற்பனையாளர்களை சந்தித்து, ஆடு என்ன விலை என்று கேட்டார். பதிலுக்கு வியாபாரி ரூ.10,000 என்று பதில் சொன்னார். இது எவ்வளவு எடை கொண்டது என தோவல் பதிலுக்கு கேட்க, 35-36 கிலோ இருக்கும் என்று, அந்த வியாபாரி பதில் கூறினார்.
திராஸ் எங்கே இருக்கு தெரியுமா?
அஜித் தோவல் யார் என்பது ஆட்டு வியாபாரிக்கு தெரியவில்லை என்பது வீடியோவை பார்க்கும்போது தெரிகிறது. "இந்த ஆடுகள், லடாக்கின் கார்கில் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. திராஸ் எங்கே இருக்கு என்று உங்களுக்கு தெரியுமா?" என்று அந்த வியாபாரி தோவலை பார்த்து கேள்வி கேட்கிறார்.
சிரிப்பு
இதற்கு தோவல் பதில் அளிக்க எத்தனிக்கும் முன்பாக, ஆனந்த்நாக் துணை கமிஷனர், காலித் ஜனாகீர், முந்திக் கொண்டு, இவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்று பதில் அளித்தார். இதையடுத்து புன்முறுவலுடன் ஆடு வியாபாரி தோளில் தட்டிக் கொடுத்த தோவல், அவரது கையை குலுக்கிவிட்டு அங்கேயிருந்து விடை பெற்றார்.
அறியவில்லை
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்படும் முன்பாக, தோவல் காஷ்மீரில் முகாமிட்டு இருந்து, நிலைமையை அறிந்து அரசுக்கு அறிவுரைகளை வழங்கியிருந்தார். இது மட்டுமா, தோவல், இந்திய உளவுத்துறையின் டாப் அதிகாரியாக இருந்தவர். அவரிடம் ஆட்டு வியாபாரி திராஸ் எங்கே உள்ளது என்று தெரியுமா என்று கேள்வி எழுப்பியது தோவலுக்கே சிரிப்பை வரவழைத்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
|
காஷ்மீரில் முகாம்
திராஸ் என்பது கார்கில் மாவட்டத்திலுள்ள முக்கியமான டவுன் பகுதியாகும். கார்கில் பற்றி அறிந்த சாமானியர்களுக்கும், திராஸ் தெரியும். ஆனால் அஜித் தோவல் யார் என்பது தெரியாமல் இப்படி ஒரு கேள்வியை கேட்டுள்ளார் ஆட்டு வியாபாரி. முன்னதாக வெள்ளிக்கிழமை, தோவல் ஸ்ரீநகர் நகருக்கு சென்று பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்தார். அவர் பாதுகாப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் இரண்டு மணி நேரம் உரையாடினார். பிறகு, சிஆர்பிஎஃப் வீரர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார் தோவல்.