மும்பை- கடற்படை கப்பலில் திடீர் தீ! 10 மாதங்களில் 14–வது விபத்து!!
மும்பை: இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். மாதங்கா என்ற கப்பல் மும்பை கப்பல் கட்டும் தளத்தில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்வற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அந்த கப்பலில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் நேற்று மாலை 3 மணியளவில் வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென கப்பலில் இருந்து குபுகுபுவென புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதைப்பார்த்து கப்பலில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி கடற்படை மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக தீயை அணைத்தனர்.
கடந்த 10 மாதத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் விபத்தில் சிக்குவது இது 14-வது முறை ஆகும். அதில் மிகப்பெரிய விபத்து மும்பை துறைமுகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐ.என்.எஸ். சிந்து ரக்ஷாக் என்ற போர்க்கப்பல் கடலில் மூழ்கியதாகும்.
அந்த விபத்தில் 18 அதிகாரிகள், ஊழியர்கள் பலியானார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ஐ.என்.எஸ். சிந்து ரத்னா என்ற நீர்மூழ்கி போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய கடற்படை தலைமை தளபதியாக இருந்த டி.கே.ஜோஷி பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.