விசாகப்பட்டினம் கடலில் போர் கப்பல் மூழ்கி விபத்து: ஒருவர் பலி, 4 பேர் மாயம்
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல் கடலில் மூழ்கியதில் ஒருவர் பலியானார், 4 பேர் மாயமாகினர்.
இந்திய கடற்படைக்கு சொந்தமான டிஆர்வி 72 என்ற சிறிய போர் கப்பல் வியாழக்கிழமை மாலை விசாகப்பட்டினம் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அந்த கப்பல் பயிற்சியை முடித்துக் கொண்டு விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு திரும்பியது. மாலை 6.30 மணிக்கு கப்பலின் ஒரு பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் கப்பல் கடலில் மூழ்கத் துவங்கியது. இது குறித்து தகவல் அறிந்து அந்த பகுதியில் இருந்த கடற்படை கப்பல்கள், டோர்னியர் மற்றும் போயிங் பி8ஐ விமானங்கள் ஆகியவை மூழ்கிக் கொண்டிருந்த கப்பலுக்கு விரைந்தன.

மீட்பு பணியில் ஈடுபட்ட அவர்கள் கப்பலில் இருந்த 23 பேரை காப்பாற்றினர். மீட்பு பணியின்போது ஒரு கடற்படை வீரர் பலியானார், 4 பேர் மாயமாகினர். கப்பல் இரவு 8 மணி அளவில் கடலில் மூழ்கியது.
மூழ்கிய கப்பல் அஸ்ட்ராவாஹினி வகையைச் சேர்ந்தது. 28.5 மீட்டர் நீளம் கொண்ட அந்த கப்பலின் எடை 112 டன் ஆகும். கோவா கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்ட அந்த கப்பல் கடந்த 1983ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்த கப்பல் மூழ்கிய சம்பவம் பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 31ம் தேதி விசாகப்பட்டினத்தில் வியாபார கப்பல் ஒன்று உரசியதில் கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் கோரா சேதம் அடைந்தது. கடற்படையில் தொடர்ந்து பல விபத்துகள் நடந்ததால் கடற்படை தளபதி டி.கே. ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு அட்மிரல் ஆர்.கே. தோவன் புதிய கடற்படை தளபதியாக கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications