விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரணட்.. டெல்லி நீதிமன்றம் பிறப்பிப்பு
டெல்லி: தலைமறைவாக உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளி வர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.
செக் பவுன்ஸ் வழக்கு ஒன்றை இன்று விசாரித்த நீதிமன்றம், இவ்வுத்தரவை பிறப்பித்தது. நேரில் ஆஜராக பல முறை நோட்டீஸ் அனுப்பியும் மல்லையா அதற்கு பதில் தரவில்லை என்பதால், அவருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்படுவதாக கோர்ட் தெரிவித்தது.
நீதித்துறையின் மீது மல்லையா அவமரியாதை வைத்துள்ளதையே அவரது நடவடிக்கைகள் காட்டுவதாக கண்டித்த நீதிமன்றம், பணத்தை திருப்பித்தரும் எண்ணம் மல்லையாவிடம் இல்லை என்பது வெளிச்சமாகிவிட்டதாகவும் கூறியுள்ளது.
ஏற்கனவே மும்பை நீதிமன்றம் ஒன்றும் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்திருந்த நிலையில் தற்போது டெல்லி நீதிமன்றமும் அதேபோன்ற பிடி வாரண்ட் வெளியிட்டுள்ளது. 9 ஆயிரம் கோடிக்கும் அதிக கடன் வைத்துள்ள மல்லையா வங்கிகளிடமிருந்து தப்பிக்க, இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.