பெங்களூர் சிறையில் சீருடை அணியாமல் 'சிக்கிய' சசிகலா!
பெங்களூர்: பெங்களூர் மத்திய சிறையில் சசிகலா சீருடை அணியாமல் இருந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் 4 வருட தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட சசிகலா, பெங்களூருவிலுள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சிறைச்சாலையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்கப்படுகின்றன என்று ஐபிஎஸ் அதிகாரி ரூபா தகவல் வெளியிட்டார். சசிகலா ஷாப்பிங் சென்றதாகவும் வீடியோ வெளியானது.

சித்தராமையா ஆதரவு?
சசிகலாவுக்கு சலுகை செய்து தர முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டதாக முன்னாள் ஏடிஜிபி சத்யநாராயணா, விசாரணை கமிஷனில் அளித்த வாக்குமூலம் இந்த பரபரப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. சசிகலாவுக்கு சிறப்பு சலுகை செய்துதர சொல்லவில்லை என்றும், சசிகலாவுக்கு சிறை விதிமுறைப்படி சலுகை அளிக்க கூறியதாகவும் சமாளித்தார் சித்தராமையா. இருப்பினும் கர்நாடக எதிர்க்கட்சிகள் சித்தராமையாவுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

மகளிர் ஆணைய தலைவி
இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் தேசிய மகளிர் ஆணைய தலைவி (கூடுதல்) ரேகா சர்மா திடீரென ஆய்வு செய்தார். அப்போது, பெண் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறை சீருடை அணியாமல் சாதாரண ஆடைகள் அணிந்திருந்ததை அவர் பார்த்து கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.
சசிகலா, இளவரசி ஆகியோர் சாதாரண ஆடைகள் அணிவதற்கு எப்படி அனுமதி வழங்கினீர்கள்? என்று அங்கு உள்ள சிறை அதிகாரிகளிடம் ரேகா சர்மா கேட்டதாகவும், சாதாரண உடைகள் உங்களுக்கு எப்படி கிடைத்தது சசிகலாவிடம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரேகா சர்மா கேள்விகளுக்கு சசிகலா அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.

சாதாரண தண்டனை
சசிகலா இருந்த சிறை அறைக்குள் சென்று ரேகா சோதனையிட்டபோது, அங்கே பல்வேறு வகையான வண்ண ஆடைகள் இருந்ததாக தெரிகிறது. ஆனால், சிறை அதிகாரிகளோ, சசிகலா சாதாரண தண்டனை கைதி, கடுங்காவல் தண்டனை கைதி இல்லை என்பதால், அவர் சீருடை அணிய தேவையில்லை என விளக்கம் அளித்துள்ளனர். இதையடுத்து பெண் கைதிகளின் குறைகளை ரேகா சர்மா கேட்டறிந்தார்.

ரூபா மறுப்பு
இதுகுறித்து ரூபாவிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பியபோது, பெங்களூர் மத்திய சிறை, விதிமுறைகளில், இப்படி ஒரு சலுகை குறிப்பிடப்படவில்லை என்றும், அனைவருக்குமே சீருடை கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார். எனவே சசிகலா சாதாரண உடையில் இருந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications