நிர்பயா ஆவணப் படத்திற்குத் தடை... 1 மணி நேரம் அகல் விளக்கை எரியவிட்டு என்டிடிவி நூதன போராட்டம்
டெல்லி: இந்தியாவின் மகள் சர்வதேச மகளிர் தினத்தன்று நிர்பயா பற்றிய ‘இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை திட்டமிட்டபடி ஒளிபரப்ப முடியாத காரணத்தால், என்டிடிவி தொலைக்காட்சி நூதனமாக போராட்டம் நடத்தியது.
டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பி.பி.சி. சார்பில் தயாரிக்கப்பட்ட இந்தப்படத்தை இந்தியாவில் திரையிட மத்திய அரசு தடை விதித்தது. கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் பலத்த விவாதங்களை ஏற்படுத்தியது 'இந்தியாவின் மகள்' என்ற ஆவணப்படம்.
இந்நிலையில் அரசின் தடை உத்தரவிற்கு முன்பாகவே இந்தப் படத்தை சர்வதேச மகளிர் தினமான இன்று திரையிடுவதாக என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அறிவித்திருந்தது.
ஒரு மணிநேரம்
இந்நிலையில், தடை விதிக்கப்பட்டதற்கு நூதனமாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் படத்தை திரையிடுவதாக முன்னர் அறிவித்திருந்த இரவு 9 மணி முதல் 10 மணி வரை படத்தை ஒளிபரப்பாமல் படத்தின் தலைப்பான ‘இந்தியாவின் மகள்' என்று எழுதப்பட்ட வாசகத்திற்குப் பின்னால் ஒரு அகல் விளக்கு எரிவது போன்று இருக்கும் புகைப்படத்தை மட்டும் ஒரு மணி நேரமாக ஒளிபரப்பியது.
அமைதியான போரட்டம்
எதிர்ப்புக்கு எதிராக கத்தி கூச்சல் போடுவதை விட அமைதியாக இருந்து போராடுவது தங்கத்திற்கு சமமானது என்று கூறுவார்கள். இந்த போராட்டமும் அத்தகையதே.
ரசிகர்கள் ஆதரவு
என்டிடிவியின் இந்த போராட்டத்திற்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்தனர். ஒருமணிநேரம் இந்த கருப்பு திரையை காணவேண்டும் என்று ட்விட்டரில் அவர்கள் கருத்திட்டனர்.
சத்தத்திற்கு எதிராக
டைம்ஸ் டிவியின் சத்ததிற்கு எதிராகவும், படத்தின் தடைக்கு எதிராகவும் நடைபெற்ற அமைதியான புரட்சிப் போராட்டம் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதன்முறையாக
காட்சி ஊடகத் துறையில் இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதன்முறை என்றும், மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும்
இந்தியாவில் இந்த படத்திற்கு தடை இருப்பினும், உலகின் பல நாடுகளில் உலக மகளிர் தினத்தையொட்டி இந்த படம் திரையிடப்பட்டது. இதேபோல அமெரிக்காவில் நியூயார்க் நகர பல்கலைக்கழகத்தின் பரூச் கல்லூரியில் இந்த ஆவணப்படம் இன்று (திங்கட்கிழமை) திரையிடப்படுகிறது.
ஒரு பெண் என்பதால்
ஆஸ்கார் விருதுபெற்ற நடிகைகள் மெரில் ஸ்டிரெஸ், பரீதா பின்டோ ஆகியோர் இதனை பார்க்கிறார்கள். நானும் ஒரு பெண் என்பதால் இந்த படத்தை பார்க்க இருப்பதாக ஸ்டிரெஸ் கூறினார். சில உலக தூதர்களும் படத்தின் இயக்குநர் லெஸ்லி உத்வினுடன் இதில் பங்கேற்கிறார்கள்.