"புரட்சித் தலைவி அம்மா".. லோக்சபாவைக் கலக்கிய பாஜக நிர்மலா சீதாராமன்!
டெல்லி: மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் அதிமுக உறுப்பினர் ஒருவர் தமிழில் கேட்ட கேள்விக்கு தானும் தமிழிலேயே பதிலளித்தார். அத்தோடு நில்லாமல், முதல்வர் ஜெயலலிதாவை புரட்சித் தலைவி அம்மா என்றும் அவர் விளித்துப் பேசியதால், அதிமுக உறுப்பினர்கள் பெரும் குஷியடைந்து, கை வலிக்க வலிக்க மேசைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
லோக்சபாவில் ஒரு அமைச்சர் தமிழில் பேசியது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. ஆங்கிலம் சரியகா பேச வராது என்று கூறப்பட்ட மு.க.அழகிரி மத்திய கேபினட் அமைச்சராக இருந்தபோது கூட தமிழில் பேசியதில்லை.
ஆனால் நிர்மலா சீதாராமன் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் அனுமதி பெற்று தமிழிலேயே பதிலளித்தது அனைவரையும் கவர்ந்தது.
பிறந்தது ஸ்ரீரங்கம் என்றாலும்
நிர்மலாவின் பூர்வீகம், திருச்சி, ஸ்ரீரங்கம். ஆனால் அவர் ஆந்திராவில் வாக்கப்பட்டவர். எனவே அவரது குடும்பமும் ஆந்திராவில்தான் இருக்கிறது.
ஆனாலும் தமிழை மறக்காதவர்
அதேசமயம், தமிழையும் மறக்காமல் இருப்பவர் நிர்மலா. தமிழிலும் பேசக் கூடியவர்.
சோழவந்தான் சு.சாமியை விட பெஸ்ட்!
எங்ளுக்கு மதுரைப் பக்கம் சோல்வந்தான்தான் பூர்வீகம்.. என்று கூறிக் கொள்ளும் சுப்பிரமணியம் சாமியை விட நன்றாகத் தமிழ் பேசக் கூடியவர் நிர்மலா சீதாராமன்.
லோக்சபாவில் தமிழ்
இந்த நிலையில் லோக்சபாவில் அதிமுக உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் தமிழில் கேட்ட கேள்விக்கு தமிழிலேயே பதிலளித்தார் நிர்மலா.
சீனத்துப் பட்டாசு
உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கேள்வி நேரத்தின்போது ஒரு துணைக் கேள்வியை எழுப்பினார். அவர் பேசுகையில், சீனப் பட்டாசுகள், சட்டவிரோதமாக நமது நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டு விற்கப்படுவதால், சிவகாசியில் பாரம்பரியமான பட்டாசுத் தொழில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதன் மூலம் நமது நாட்டின் பட்டாசுத் தொழில் அழியும் நிலை உள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று தமிழில் கேட்டார்.
புரட்சித் தலைவி அம்மா...
இதற்கு தமிழில் பதிலளிக்க சபாநாயகரின் அனுமதியைக் கோரினார் நிர்மலா. சபாநாயகரும் அனுமதி அளித்தார். பி்ன்னர் நிர்மலா பேசுகையில், இதுதொடர்பாக புரட்சித் தலைவி அம்மா, எழுதிய கடிதம் எனக்கு வந்துள்ளது. அது தொடர்பாக தேவையான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கைத்தட்டல் கூரையைப் பிய்த்தது
நிர்மலா சீதாராமன் தமிழில் பதிலளித்ததை விட புரட்சித் தலைவி அம்மா என்று கூறிப் பேசியதால், அதிமுக உறுப்பினர்கள் குஷியாகி மேசைகளைப் பலமாக தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
புன்னகைத்த ஜேட்லி
ராதாகிருஷ்ணன் கேட்டது, நிர்மலா தமிழில் பதிலளித்தது, புரட்சித் தலைவி அம்மா என்று சொன்னது, அதைக் கேட்டு அதிமுகவினர் மேசைகளைத் தட்டியது ஆகியவற்றை முன்வரிசையில் அமர்ந்திருந்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி பலத்த புன்னகையுடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.