கோவா தேர்தல் பொறுப்பாளராக நிதின் கட்கரி நியமனம்
கோவா: கோவா மாநில சட்டசபைக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவா மாநில சட்டசபையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைகிறது. ஆகையால் அம்மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
40 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது கோவா சட்டசபை. கடந்த 2012 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றியது. அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், மகாராஷ்டிரா கோமந்தக், கோவா விகாஷ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்தான் இதுவரை தேர்தல் களத்தில் இருந்தன.
தற்போது ஆம் ஆத்மி கட்சியும் கோவா தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. 40 தொகுதிகளிலும் தங்கள் கட்சி போட்டியிடும் என அந்த கட்சி அறிவித்து அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டது.
இந்நிலையில், கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பொறுப்பாளராக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஜார்கண்ட் மாநில பாஜக தலைவராக லக்ஷ்மன் கில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பிறப்பித்துள்ளார்.