தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது: சித்தராமய்யா பிடிவாதம் #cauvery
டெல்லி: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்க முடியாது என்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா கூறியுள்ளார். 2015-16ம் ஆண்டு பருவமழை மிக மோசமானதாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தலைமையிலான காவிரி நதிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பிரதிநிதிகளும், தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்துக்கு இதற்கு மேல் காவிரி தண்ணீர் திறந்து விட முடியாது. கர்நாடகாவில் குடிநீர் பிரச்னை நிலவுவதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ஒரு போக சம்பா சாகுபடிக்காவது காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படியும், தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்றும், அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் கர்நாடகாவில் வறட்சி நிலவுவதாகவும், உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி ஆய்வு நடத்த வேண்டும் என்றும் கூறினார். தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்தால் கர்நாடகாவில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். இறுதியாக அவர், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட திறக்க முடியாது என்று அவர் கைவிரித்து விட்டார்.
சித்தராமைய்யாவின் பிடிவாதமான பேச்சினால் இரு மாநிலங்களிடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.