அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது - சக்தி காந்த தாஸ்
நாடு முழுவதும் மின்னணு பண பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
டெல்லி: அரசு ஊழியர்களுக்கு மாதச்சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது என்று சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் மின்னணு பண பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து நாடுமுழுவதும் சில்லறை ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு வியாபாரிகள், விவசாயிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அடுத்த மாதம் சம்பளப்பணத்தை எப்படி வங்கியில் இருந்து எடுப்பது? ஏடிஎம்கள் செயல்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. எனவே மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வழியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சக்தி காந்த தாஸ், ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மிக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அவரது உரையின் முக்கிய அம்சங்கள்:
•கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்க துரித நடவடிக்கை
•நபார்டு வங்கிகள் மூலம் கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
•கிராம கூட்டுறவு வங்கி வரை பணம் விநியோகம் சுமூகமாக நடைபெறும்
•ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங்கிற்கு சேவைக்கட்டணம் ரத்து
•டெபிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு டிசம்பர் 31 வரை சேவைக்கட்டணம் ரத்து
•நாடுமுழுவதும் சுங்கச் சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
•மின்னணு பண பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை
•மின்னணு முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ள அரசு அலுவலகங்களுக்கு உத்தரவு
•அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது என்பன உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
•நாடு முழுவதும் 85000 ஏடிஎம்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
சக்தி காந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.