மோடியின் “பணமதிப்பிழப்பு’.. இத பத்தி விசாரிக்க வேறேதும் இருக்கா? வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
டெல்லி: கடந்த 2016 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட ரிட் மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை அக்டோபர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு 8 மணியை இந்தியர்கள் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்தியாவின் பொருளாதாரத்தையும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் புரட்டிப்போடும் அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்ட நாள் அது.
அப்போது தொலைக்காட்சிகளின் வாயிலாக நாட்டு மக்கள் முன் தோன்றிய பிரதமர் மோடி பயன்பாட்டில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
சிவசேனா சின்னம், கட்சி தொடர்பான வழக்கு: உத்தவ் தாக்கரே மனு தள்ளுபடி- உச்சநீதிமன்றம் அதிரடி
நிரம்பிய வங்கிகள்
கள்ளநோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அன்று இரவு முதல் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களின் வாயில்களில் பணத்தை எடுத்த கோடிக்கணக்கான மக்கள் காத்து கிடந்தனர். இந்த பணத்துக்கு மாற்றாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
வழக்கு
பிரதமர் மோடி வெளியிட்ட இந்த திடீர் அறிவிப்பால் நாடு முழுவதும் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டனர். இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரித்தது.
உச்சநீதிமன்றம் கவலை
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு பண மதிப்பிழப்பு திட்டத்திற்கான அரசின் நோக்கம் பாராட்டிற்குரியது என்றும், ஆனால், இதன் காரணமாக மக்கள் எதிர்கொண்டு வரும் சிரமங்களை நினைத்து கவலை அடைகிறோம் என தெரிவித்தது.
அரசியல் சாசன அமர்வு
மேலும் அரசின் பொருளாதார கொள்கையில் தலையிட உச்சநீதிமன்றம் விரும்பவில்லை எனவும், இது தொடர்பாக அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திட வேண்டும் என்று அந்த அமர்வு உத்தரவிட்டது. அந்த வழக்கில் கோரப்பட்ட தடை உத்தரவை பிறப்பிக்க மறுத்த உச்சநீதிமன்றம், அரசியல் சாசன அமர்வுக்கு இதனை மாற்றியது.
வழக்கு ஒத்திவைப்பு
இந்த நிலையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட 57 ரிட் மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணமதிப்பிழப்பு தொடர்பாக இன்னும் ஏதாவது விசாரிக்கப்பட வேண்டி இருக்கிறதா? என கேள்வி எழுப்பி, அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.