அமமுகவிற்கு அதிருப்தி... தினகரன் மீது கடும் கோபத்தில் சசிகலா
அதிமுகவை கைப்பற்றச் சொன்னால் அமமுக என்று தனியாக அமைப்பு தொடங்குவதா என்று தினகரனை சசிகலா திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
பெங்களூரு: எம்ஜிஆர்,திராவிடம் இல்லாத புதிய கட்சியாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் தொடங்கியதற்கு டிடிவி தினகரன் மீது சசிகலா கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முறை சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன், புதிய அமைப்பிற்கு வைக்கப் போகும் 3 பெயர்களை கூறி சம்மதம் வாங்கியதாக தெரிகிறது.
அம்மா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக), எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் (எம்.அதிமுக), எம்ஜிஆர் அம்மா திராவிடர் கழகம் (எம்அதிக) ஆகிய 3ல் ஒரு பெயரை கட்சிக்கு வைக்க போகிறேன் என பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் கூறினார்.
பஞ்சாயத்து செய்த சசிகலா
கடந்த முறை பெங்களூரு சிறையில் பஞ்சாயத்து பலமாகவே நடந்துள்ளது. தினகரன் அனுராதா தம்பதியினரையும், விவேக் கீர்த்தனா தம்பதியினரையும் வைத்து பேசினார். அரசியலை தினகரனும், சொத்துக்களை விவேக்கும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே சசிகலாவின் கட்டளை.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்
வழக்கம் போல சிறைக்கு வெளியே வந்த தினகரனோ புதுக்கட்சிக்கு சசிகலாவிடம் ஆசிர்வாதம் வாங்கினேன் என்று கூறினார். குடும்ப குடைச்சல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) என புதுப்பெயரை அறிவித்தார்.
அண்ணா, திராவிடம் இல்லையே
கட்சியின் பெயரே பூகம்பத்தை கிளப்பியுள்ளது. கட்சிப்பெயரில் திராவிடம் இல்லை. அண்ணா இல்லை என்று கூறி கட்சியில் இருந்தே விலகுவதாக அறிவித்துவிட்டார் நாஞ்சில் சம்பத். தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்ற கூறினாலும் திராவிடம் இல்லாததது வருத்தம் என பல நிர்வாகிகளும் மனசுக்குள் புழுங்குகிறார்கள்.
கோபத்தில் சசிகலா
பெங்களூரு சிறையில் இதை நேரலையில் பார்த்த சசிகலாவின் கோபத்தை நேரில் பார்த்த இளவரசி ஆடிப்போய் விட்டாராம். என்கிட்ட ஒன்னு சொல்லிட்டு, அங்கே போய் வேற ஒன்னு செய்வதா? கட்சி பெயரில் எம்ஜிஆர் எங்கே? திராவிடம் என்ன ஆச்சு? கொடியில் ஜெயலலிதா படத்தை மட்டும் போதுவதா? ஒரு பக்கம் எம்ஜிஆர், இன்னொரு பக்கம் அண்ணா படத்தை போட்டு இருக்கலாமே என்று சொன்னாராம்.
தூக்கி போடுவது சரியா?
இத்தனை ஆண்டு காலமாக அண்ணா நாமம் வாழ்க, எம்ஜிஆர் நாமம் வாழ்க என பேசிவிட்டு, இப்போ தூக்கிப்போட்டது சரியா? தொண்டர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? முக்கிய தலைவர்கள் வெளியேறத் தொடங்கி விடுவார்கள். தனியாக நிற்க வேண்டியதுதான். எதிராளிகள் விமர்சிக்க நாமே சந்தர்ப்பம் தரலாமா என்று இளவரசியிடம் கூறினாராம். நான் ஒரு முக்கிய முடிவு எடுக்கும் நேரம் வந்து விட்டது என்றும் கூறினாராம் சசிகலா.
முதல்வர் நாற்காலி கனவு
இதற்கெல்லாம் அலட்டிக்காத டிடிவி தினகரனோ, அமமுக ஆட்சிக்கட்டிலில் அமரும் என்று கூறி வருகிறார். தேர்தலில் 234 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்துவேன் என்றும் 150 தொகுதிகளில் கட்டாயம் குக்கர் விசிலடிக்கும். நான்தான் அடுத்த முதல்வர் என்று அவரது ஆதரவாளர்களிடம் கூறி வருகிறாராம்.
விவேக், விஷ்ணுபிரியா
தினகரன் மீது திவாகரன், இளவரசி வாரிசுகளும் கடும் கோபத்தில்தான் இருக்கின்றனர். மேலூர் கூட்டத்தில் திவாகரன் மகன் ஜெயானந்த் பங்கேற்கவில்லை. அவர் சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறாராம். இளவரசியின் மகள் விஷ்ணு பிரியாவும், சந்திக்க தேதி கேட்டிருக்கிறாராம். ஆனால் சசிகலாவே பரோலில் வெளியே வரும் நேரம் கூடி வந்துள்ளது. சசிகலா வரும் பட்சத்தில் குடும்பத்தில் பெரும் புயல் வீசும் என்றே கூறப்படுகிறது.