விதவை மருமகளை பராமரிக்க மாமனாரை கட்டாயப்படுத்த முடியாது: டெல்லி கோர்ட் அதிரடி தீர்ப்பு
டெல்லி: கணவரை இழந்த மருமகளை காப்பாற்றும் பொறுப்பு மாமனாருக்கு உள்ளதாக எந்த ஒரு சட்டத்திலும் இடமில்லை என்று டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனக்கு மாமனார் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கணவரை இழந்த பெண் தாக்கல் செய்த மனுவை டிஸ்மிஸ் செய்து, இதுபோன்ற ஒரு தீர்ப்பை அளித்துள்ளது டெல்லி கோர்ட். மாமனார் சம்பாதிக்கிறாரோ, இல்லையோ அதெல்லாம், மருமகளை கவனித்துக்கொள்ளும் பிரிவில் வராது என்றும் டெல்லி கோர்ட் தடாலடியாக கூறியுள்ளது.
மாமாதம் ரூ.35 ஆயிரம் வேண்டும்
டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் கணவரை இழந்த பெண் ஒருவர் வித்தியாசமான கோரிக்கையுடன் மனுத் தாக்கல் செய்திருந்தார். கணவரை இழந்த தனக்கு, மாமனார் மாதம் ரூ.35ஆயிரத்தை உதவித் தொகையாக வழங்க உத்தரவிட வேண்டும் என்பதே அந்த கோரிக்கை.
படிப்பு கம்மி, பென்சன் மட்டும்தான்
9ம் வகுப்பு வரைதான் தான் படித்துள்ளதாகவும், விதவைகளுக்கான பென்சனாக ரூ.1000 மட்டுமே தனக்கு கிடைத்துவருவதாகவும், எனவே மாமனாரிடமிருந்து நிதி உதவி பெற்றுத் தரும்படியும் அந்த பெண் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
மாமனாருக்கு பொறுப்பு கிடையாது
இந்த மனுமீதான விசாரணை முடிவில் நீதிபதி சில்பி ஜெயின் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளார். நீதிபதி கூறியுள்ளதாவது: மாமனார் பணம் சம்பாதிக்கிறாரோ, அல்லது சும்மா இருக்கிறாரோ... அதெல்லாம் சட்டத்திற்கு தேவையில்லை. ஏனெனில், மருமகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு மாமனாருக்கு இருப்பதாக எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை.
மாமனாரே வேலையில்லாமல் உள்ளார்..
இந்த வழக்கை பொறுத்தளவில், மாமனார் வயது முதிர்ந்தவராகவும், வேலைக்கு போகாமலும் உள்ளார். அவரை நம்பி மனைவியும் உள்ளார். ஆனால் மருமகளுக்கோ அரசு அளிக்கும் விதவை பென்சன் வந்து கொண்டுள்ளது. எனவே, மாமனாரும், மருமகளும் ஒரே மாதிரியான அந்தஸ்தில்தான் உள்ளனர். எப்படிப் பார்த்தாலும், மாமனாரிடமிருந்து பணம் கேட்பது சரியாக தெரியவில்லை. இவ்வாறு நீதிபதி கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.