பார்க்கிங் செய்ய இடம் இல்லைன்னா கார் பதிவு கிடையாது.. மத்திய அரசின் அடுத்த அதிரடி
டெல்லி: பார்க்கிங்கிற்கு இடம் இல்லாதவர்களுக்கு கார் பதிவு கிடையாது என்ற புது விதிமுறையை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.
ஈ.எம்.ஐ மூலமான கார் விற்பனை, இந்தியர்களின் சராசரி வருமான உயர்வு போன்றவற்றால் கார் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக நகரங்களில் கார் வைத்திருப்பது கவுரவம் சார்ந்த விஷயமாகிவிட்டது.
இதனால் சென்னை, கோவை, பெங்களூர் என எந்த ஒரு நகராக இருந்தாலும் கார் இல்லாத மத்தியத்தர, உயர்தட்டு வீடுகளை பார்க்க முடியாத சூழல்.

சாலைகளில் நெருக்கடி
அதேநேரம், காருக்கான பார்க்கிங் வசதியை பெரும்பாலானோர் செய்வதில்லை. வீட்டுக்கு வெளியே சாலையை அடைத்தபடி, தெருவை ஆக்கிரமித்தபடி காரை நிறுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் அந்த வழியாக போகும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் தடுமாறுவது வாடிக்கையாகிவிட்டது.

புது விதிமுறை
இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டம் வைத்துள்ளது. இனிமேல் கார் வாங்குவோர் பார்க்கிங் இடம் உள்ளதற்கான ஆவணத்தை காண்பிக்காவிட்டால் அந்த காரை ரிஜிஸ்டர் செய்ய முடியாதபடி விதிமுறையை மாற்ற உள்ளதாம் மத்திய அரசு.

வெங்கையா நாயுடு
நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கையா நாயுடு பேட்டியொன்றில் இதை உறுதி செய்துள்ளார். பார்க்கிங்கிற்கு இடம் உள்ளது என்பதற்கான ஆதாரத்தை காட்டாவிட்டால் காரை பதிவு செய்ய முடியாது. எனவே ஒவ்வொருவரும் முதலில் பார்க்கிங்கிற்கு இடத்தை பார்த்துவிட்டுதான் கார் வாங்க கிளம்ப முடியும்.

பொதுப் போக்குவரத்து
நகர்ப்புறங்களில் சாலை நெருக்கடியை குறைக்க வாடகை கார்களை ஷேர் செய்யும், பூலிங் சிஸ்டம் ஊக்குவிக்கப்படும் என்றும் நாயுடு தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்தை வசதியானதாக மாற்றுவதன் மூலம் கார்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவிடாமல் கட்டுப்படுத்துவது நோக்கமாகும்.












Click it and Unblock the Notifications