எங்களுக்கு ஓட்டு போடவில்லை என்றால்... நோ மின்சாரம், நோ குடிநீர்... வாக்காளர்களை மிரட்டும் அமைச்சர்
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதவர்களுக்கு மின் இணைப்பும் நீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என அம்மாநில அமைச்சர் தபன் தாஸ்குப்தா வாக்காளர்களை மிரட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து முக்கிய கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர்.
இணையவழியில் சர்வதேச பெண்கள் மாநாடு...18 நாடுகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்று அசத்தல்
மாநிலத்திலுள்ள 294 தொகுதிகளில் கூட்டணி கட்சிக்கு மூன்று தொகுதிகளை மட்டும் ஒதுக்கிவிட்ட, மீதமுள்ள 291 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே களம் காண்கிறது. இதனால் அக்கட்சியினர் பிரச்சாரங்களைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மே, வங்க தேர்தல்
முந்தைய தேர்தல்களைவிட திரிணாமுல் காங்கிரசுக்கு இது மிகவும் சவாலான தேர்தலாக அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. இதனால் அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ள வாக்காளர்களை அறுவடை செய்ய பாஜக தயாராகி வருகிறது. இதை முறியடிக்க திரிணாமுல் காங்கிரஸ் சார்பிலும் பல்வேறு பிரசார யுக்திகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மின்சார இணைப்பு துண்டிப்பு
இந்நிலையில், சப்டகிராம் தொகுதியில் போட்டியிடவுள்ள விவசாய துறை அமைச்சர் தபன் தாஸ்குப்தா வாக்காளர்களை மிரட்டும் வகையில் பேசியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சப்டகிராமில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடி நீர், மின்சாரம் போன்ற சலுகைகள் ரத்து செய்யப்படும் என்று கூறி அதிர வைத்தார்.
சின்ன பேரம் தான்
மேலும், இதை ஒரு எளிமையான பேரம் எனக் குறிப்பிட்ட அவர், திரிணாமுல் கட்சிக்கு வாக்களிக்காதவர்கள் இந்த சேவைகளைப் பெற பாஜகவை அணுகலாம் என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார். மேற்கு வங்கத்தில் அமைச்சர் ஒருவரே வாக்காளர்களை மிரட்டும் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்த செயல் பொறுப்பற்ற வகையில் இருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
தேச துரோகிகள்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் வாக்காளர்களை மிரட்டும் வகையில் பேசுவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே, அக்கட்சியின் எம்எல்ஏ ஹமீதுல் ரஹ்மான் என்பவர், தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் அனைவரும் தேச துரோகிகள் என்றும் தேர்தலுக்குப் பின்னர் அவர்கள் முறையாகக் கவனிக்கப்படுவார்கள் என்றும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.