ஹிந்தி திணிப்புக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.. தமிழகம் தலைமை தாங்க கன்னட வளர்ச்சி ஆணையர் அழைப்பு
Recommended Video
பெங்களூர்: ஹிந்தி மொழி பேசாத மாநிலங்கள் கூட்டு சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா கூறியுள்ளார்.
கன்னட வளர்ச்சி ஆணையம் என்ற ஒன்று கன்னட மொழி வளர்ச்சிக்காக கர்நாடக அரசால் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது. பொதுவாக ஆளும் கட்சியை சேர்ந்த, கன்னட அறிஞர் ஒருவர் இதன் தலைவராக நியமிக்கப்படுவார்கள்.
கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவராக உள்ளவர் எம்.ஜி.சித்தராமையா, தமிழ் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
இந்தி திணிப்பு
மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு, ரயில்வே, கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி சேவைகள், அஞ்சலகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஹிந்தி திணிக்கப்பட்டு வருகிறது. ஹிந்தி திணிப்பு மொழி பிரச்சினை மட்டும் கிடையாது, மக்களின் வாழ்வாதார பிரச்சினையாகும். மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகள் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்கே வேண்டுமானாலும் பணி செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. இதனால் தென் மாநிலங்களை ஹிந்தி மொழி வழியாக பிறர் ஆக்கிரமித்துவிடுவார்கள்.
எம்.பிக்கள் மவுனம்
மத்திய அரசு பணிகளுக்கு ஹிந்தி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதே, தென் மாநில மக்களை வேலைவாய்ப்பு ரீதியாக சுரண்டும் முயற்சிதான். இதுகுறித்து தென் மாநில எம்.பிக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. சிலருக்கு தெரிந்திருந்தாலும் அக்கறை இல்லை.
இந்தியாவில் இருந்து வெளியேறு
ஹிந்தி பேசத் தெரியாவிட்டால் இந்தியாவில் இருந்து வெளியேறு என்று கன்னடர்களை மிரட்டும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. வாழ்வாதாரம் மற்றும் தாய் மொழி சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க ஹிந்தி அல்லாத மாநிலங்களின் மொழி நல்லிணக்க கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். திராவிட மொழியினரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த இது உதவும்
தமிழகம் தலைமை தாங்க வேண்டும்
தாய் மொழியை காப்பாற்றிக்கொள்ள 50 வருடங்கள் முன்பே தமிழகம் எழுச்சியுடன் போராடியது. அப்போது இதை மொழி வெறி என்று கொச்சைப்படுத்தி கடந்து சென்றோம். ஆனால், இப்போதுதான் தமிழர்களின் தொலைநோக்கு சிந்தனை புரிகிறது. திராவிட மாநிலங்களின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதில், தமிழகம் எங்களை வழிநடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.