நான் ஹிட்லர்தான், தேவைப்பட்டா அவரை விட மோசமாவும் இருப்பேன்... சந்திரசேகர ராவ்
ஹைதராபாத்: என்னை ஹிட்லர் என்று சிலர் வர்ணிப்பதைப் பற்றி நான் கவலையே படவில்லை. ஆமாம், நான் ஹிட்லர்தான். தேவைப்பட்டால் ஹிட்லரை விட படு மோசமாகவும் இருப்பேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ்.
தெலுங்கானா மாநில மக்கள் குறித்த சர்வே ஒன்றுக்கு சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். ரூ. 20 கோடியில் இது நடத்தப்படுகிறது. இது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ஆனால் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தவும், தேவைப்படுவோருக்கு தேவைப்படும் திட்டங்கள் உதவிகள் சென்று சேரவும் உறுதி செய்யவே இந்த சர்வே என்று ராவ் விளக்கியுள்ளார்.
நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஹைதராபாத்தில் சந்தித்துப் பேசினார் ராவ். அதற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராவ். அப்போது அவர் கூறியதாவது....
நல்ல சந்திப்பு
நானும், சந்திரபாபு நாயுடுவும் இதயப்பூர்வமாக, ஆக்கப்பூர்வமான முறையில் சந்தித்துப் பேசிக் கொண்டோம். சந்திப்பு சுமூகமாக இருந்தது.
அரசு ஊழியர்கள் பங்கீடு
4500 அரசு ஊழியர்களை இரு மாநில அரசுகளும் எப்படி பிரித்துக் கொள்வது என்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
தெலுங்கானா சட்டசபைக் கூட்டம்
ஆந்திர மாநில சட்டசபைக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் அது முடிவடைகிறது. அதன் பின்னர் தெலுங்கானா மாநில சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்கும் என்றும் எங்களது கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நான் ஹிட்லர்தான்
தெலுங்கானா சர்வேயை சிலர் விமர்சிக்கிறார்கள். என்னை ஹிட்லர் என்று கூட சொல்கிறார்கள். நான் ஹிட்லர்தான். மறுக்கவில்லை. தேவைப்பட்டால் ஹிட்லரை விட மோசமாகக் கூட நடக்கத் தயங்க மாட்டேன். நான் செய்வது எல்லாம் தெலுங்கானா மக்களின் நண்மைக்காகத்தான் என்றார் ராவ்.
ஆளுநர் ஏற்பாடு
முன்னதாக பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற்காக இரு மாநில ஆளுநர் இ.எல். நரசிம்மன்தான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.