கங்கையை மட்டுமல்ல ‘கோமதி’யையும் சுத்தம் செய்வோம்: ராஜ்நாத் சிங்
டெல்லி: கங்கையை மட்டுமல்ல கோமதி மற்றும் பிற நதிகளையும் விரைவில் சுத்தப் படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததும் தங்கள் தேர்தல் வாக்குறுதியின் படி கங்கை நதியை விரைந்து தூய்மைப் படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
அப்போது அவர் கூறியதாவது:-
நதிகளின் தூய்மை...
‘நதிகளின் தூய்மையில் தான் நாட்டின் ஆரோக்கியம் மறைந்துள்ளது. நதிகள் வறண்டால் நாடும் வறண்டு விடும். எனவே தான் புனித நதியான கங்கையை சுத்தம் படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறோம்.
அடுத்து கோமதி...
எங்களது இந்த நதிகளைத் தூய்மைப் படுத்தும் பணி கங்கையோடு நின்று விடாது. கங்கையைத் தொடர்ந்து கோமதி நதியை தூய்மைப் படுத்தும் திட்டத்தை கையில் எடுக்க உள்ளோம். அதனைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக மற்ற நதிகளையும் வரிசையாக தூய்மைப் படுத்துவோம்.
அறிக்கை...
கோமதி ஆற்றைச் சுத்தப்படுத்துவது தொடர்பான அறிக்கையை ஏற்கனவ கேட்டுள்ளோம். மேலும் கோமதி ஆற்றின் கரையை, அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றுமுனை போல மாற்றியமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
நாட்டின் நலன்...
ஒரு நாட்டின் நலன் என்பது அந்த நாட்டின் நதிகளின் நிலையையும் பொறுத்ததாகும். எனவே நதிகளை சுத்தப்படுத்தினால் நாடும் நலமாக இருக்கும்.
எங்கள் நோக்கம்...
நாட்டை பொருளாதார ரீதியாக செழுமையானதாக மாற்றுவது மட்டும் எங்கள் நோக்கமல்ல. நதிகளின் தூய்மை மூலம் புனித நாடாக மாற்றுவது தான் எங்களது குறிக்கோள்' என அவர் தெரிவித்துள்ளார்.