மனைவியுடன் பேசாட்டி அது சித்திரவதை இல்லையாம்.. சுப்ரீம் கோர்ட்
ஹைதராபாத்: மனைவியுடன் பேசாமல் இருந்தால் அதை சித்திரவதை என்று சொல்ல முடியாது என்று உச்சநீதிமன்றம் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது.
மனைவியுடன் பேசாமல் இருப்பதை பெரிய சித்திரவதையாக எடுத்துக் கொ ள்ளத் தேவையில்லை பேசாமல் இருப்பதை மட்டும் வைத்து அது சித்திரவதை என்ற முடிவுக்கு எப்படி வர முடியும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், திருமணமாகி 20 நாட்களாகியும் எனது கணவர் என்னுடன் பேசுவதில்லை. என்னை ஏற்க மறுத்து வருகிறார். நான் எவ்வளவோ முயற்சித்தும் கூட அவர் பேசுவதில்லை.
சித்திரவதை
என்னை ஏற்க மறுத்து, பேசாமல் இருந்து சித்திரவதை செய்து வருகிறார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதையடுத்து போலீஸார் கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
ஹைகோர்ட்டில்
இதை எதிர்த்து ஆந்திர மாநில ஹைகோர்ட்டில் கணவரும், பெற்றோரும் மனு செய்தனர். அதை விசாரித்த ஹைகோர்ட் கணவர், பெற்றோரின் கூற்றை ஏற்க மறுத்து, அவர்கள் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்று கூறி விட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் கணவரும், பெற்றோரும் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் மோகன் சாந்தன்கெளடர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மனைவி கொடுத்த புகாரை நிராகரித்தது. அதில் சாரம் இல்லை என்று கூறிய பெஞ்ச், பேசாமல் இருப்பதை எப்படி சித்திரவதை எனக் கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பியது.
குற்றம் இல்லை
கணவர் மற்றும் பெற்றோர் மீது மிகக் கடுமையான 498 ஏ பிரிவின் கீழ் வழக்குப் போட்டுள்ளனர். ஆனால் அந்த அளவுக்கு இவர்கள் கடுமையான குற்றம் எதையும் புரியவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.