கன்னியாஸ்திரி வழக்கு: பி.எஸ்.எப். வீரருக்கு ரூ.2000 லஞ்சம் கொடுத்து இந்தியாவுக்கு வந்த குற்றவாளி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தவர்களில் ஒருவர் எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்து சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து இந்திய எல்லைக்குள் வந்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 71 வயது கன்னியாஸ்திரி பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைதான வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது ஹபிபுல் கூறுகையில், பெனாபோல்-ஹரிதாஸ்பூர் பகுதியில் பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர் ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்து இந்தியாவுக்குள் நுழைந்தேன். கொள்ளையடிக்கத் தான் இந்தியா வந்தேன். பலாத்காரம் செய்ய திட்டமிடவில்லை என்றார்.
கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்த வழக்கு விசாரணையில் ஒரு சர்வதேச கொள்ளை கும்பலின் ஈடுபாடு உள்ளது தெரிய வந்துள்ளது. அந்த கும்பலில் இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். வங்கதேசத்தில் உள்ள தங்களின் தலைவர்கள் திருடுவதற்கு திட்டமிட்டு கொடுப்பது, திருடியதை அவர்களுக்கு அனுப்பி வைக்க தெரிவிப்பது குறித்து ஹபிபுல் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக புர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகளும் எல்லை பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்களுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் வந்ததாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தைச் சேர்ந்த திருடர்கள் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு இந்தியாவுக்குள் வருகிறார்கள். திருடிய பிறகு சிறிது காலம் தலைமறைவாக இருந்துவிட்டு பின்னர் எல்லையில் உள்ள வீரர்களுக்கு மீண்டும் லஞ்சம் கொடுத்து தங்கள் நாட்டுக்கு சென்றுவிடுகிறார்கள்.
கான்வென்ட்டில் கொள்ளையடிக்கத் தான் சென்றோம், எங்களை பார்த்த கன்னியாஸ்திரி சப்தம் போட்டு எங்களை தடுத்து நிறுத்த முயன்றதால் அவ்வாறு செய்தோம் என குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.
6 பேர் கைதான நிலையில் கடந்த வாரம் லூதியானாவில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தள்ளது.