மாவோயிஸ்ட் இயக்க முன்னாள் தலைவர் சபயசாசி பாண்டா கைது!
புவனேஸ்வர்: ஒடிஷா மாநில அரசால் தேடப்பட்டுவந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் முன்னாள் செயலாளர் சபயசாசி பாண்டா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திரா, ஒடிஷா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இதில் ஒடிஷா மாநில மாவோயிஸ்டுகள் பிரிவின் மூத்த தலைவராக இருந்தவர் சபயசாசி பாண்டா.
ஒடிஷாவில் கடந்த 2008ல் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவரான லக்ஷ்மானந்தா சரஸ்வதி மற்றும் அவரது சீடர்கள் கொலை செய்யப்பட்டனர். இதில் பாண்டா முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
மேலும் மாவோயிஸ்டுகள் இயக்கம் நடத்திய தாக்குதல்களில் மாநில போலீசார் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்குகளும் பாண்டா மீது நிலுவையில் உள்ளன. 2012ஆம் ஆண்டு இத்தாலிய சுற்றுலா பயணிகள் கடத்தப்பட்ட வழக்கிலும் பாண்டா சேர்க்கப்பட்டார்.
மாவோயிஸ்டுகள் இயக்கத்திலிருந்து விலகல்
இந்த இத்தாலிய பயணிகள் கடத்தப்பட்ட விவகாரத்தில்தான் மாவோயிஸ்டுகள் அமைப்புக்கும் பாண்டாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதைத் தொடர்ந்து பாண்டாவை அமைப்பிலிருந்து நீக்குவதாக மாவோயிஸ்ட் அமைப்பு அறிவித்தது.
தனி இயக்கம்
இதன் பின்னர் ஒடிஷா மாவோவாதி கட்சி என்ற அமைப்பை தொடங்கினார். அதன் பின்னர் சிபிஐ- மார்க்சிஸ்-லெனினிஸ்ட்- மாவோயிஸ்ட் என்ற ஆயுத இயக்கத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது.
4 மாவட்டங்களில்..
ஒடிஷாவின் கஞ்சம், கஜபதி, ராயகடா, கந்தமால் மாவட்டங்களில் இந்த இயக்கம் செயல்பட்டு வந்தது. பாண்டாவை பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ5 லட்சம் சன்மானமும் அறிவிக்கப்பட்டிருந்தது.
கைது- முதல்வர் அறிவிப்பு
இந்த நிலையில் பாண்டா பிரமபூர் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிஷா சட்டசபையில் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இதனை அதிகாரப்பூர்வமா அறிவித்ததுடன் போலீசாருக்கு பாராட்டும் தெரிவித்தார்.
அரசியல் குடும்பம்
பாண்டாவின் தாத்தா சுதந்திர போராட்ட வீரர். அவரது தந்தை மூன்று முறை ஒடிஷா மாநில எம்.எல்.ஏவாக இருந்தவர். அவர் மறைவதற்கு சில காலம் முன்பாக பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார். பாண்டாவின் சகோதரர் இப்போதும் ஆளும் பிஜூ ஜனதா தளத்தில் முக்கிய பிரமுகராக இருக்கிறார்.
போராளி மனைவி
பாண்டாவின் மனைவி சுபஸ்ரீயும் இடதுசாரி சித்தாந்த போராளி. அவர் மீதும் மாநில அரசு வழக்குகள் போட்டிருந்தன. அவற்றில் இருந்து விடுதலையாகி தற்போது பழங்குடி இன மக்களுக்கான வெளிப்படையான அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.